ஆளுநர் சர்ச்சைக்கு மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ‘சம்பவம்’.. ஸ்கூல் போர்டில் எழுதினதை பாருங்க!
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியானது என்று பேசியது பெரும் சர்ச்சைக்குள்லான நிலையல், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆய்வுக்குச் சென்றபோது மாணவர்களிடம் கலந்துரையாடுகையில் 'தமிழ்நாடு' என்று பள்ளி வகுப்பறையின் ஸ்மார்ட் போர்டில் எழுதிக் காட்டியது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று அழைப்பதை விட தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமானது எனத் தெரிவித்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.
தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்திலும், ஆளுநர் vs திமுக அரசு மோதல் முற்றியது. இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'தமிழ்நாடு' என்று மாணவர்களுக்கு எழுதிக் காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரின் சர்ச்சை பேச்சு
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த வாரம் காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "இந்தியா முழுவதும் எந்த ஒரு விஷயத்தை முன்னெடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிப்பது வாடிக்கையாகி விட்டது. எதற்கெடுத்தாலும் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர். தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. மாநிலத்தை தமிழ்நாடு என்று அழைப்பதை விட தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமானது" எனப் பேசி இருந்தார்.

கடும் எதிர்ப்பு
தமிழ்நாடு ஆளுநரின் இந்த பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆளுநரின் கருத்துக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகக் களமிறங்கின. திமுக பொருளாளரும் எம்.பியுமான டி.ஆர்.பாலு, ஆளுநரின் பேச்சை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாடு என்று அழைப்பதே சரியானது என்றும், ஆளுநரின் கருத்துக்கு கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன. தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டானது.

தொடர்ந்த மோதல் போக்கு
இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக இந்த அரசு என்ற சொல்லைப் பயன்படுத்தி இருந்தார். அதேபோல, தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பல்வேறு கருத்துகளை வாசிக்காமல் தவிர்த்தது தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதிர்வலை
ஆளுநரின் செயலைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே ஆளுநரின் பேச்சை அவைக்குறிப்பில் ஏற்றக்கூடாது, தமிழ்நாடு அரசு தயாரித்து அச்சிட்ட முழுமையான உரையையே அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோதே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அமைச்சர் அன்பில் மகேஷ்
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை, ராயபுரம் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடும்போது 'தமிழ்நாடு' என்று ஸ்மார்ட் பலகையில் எழுதிக் காட்டினார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழகம் என்று அழைக்க வேண்டும் என ஆளுநர் ரவி பேசிய நிலையில், அவருக்கான எதிர்வினையாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இந்தச் செயல் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications