அடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான் நடைபெறும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பொறுத்தவரை அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வம்பில் மாட்டிக்கொள்வது வழக்கம். மனிதர் வெள்ளந்தியாக பேசினாரா..இல்லை சூதுவாதோடு பேசினாரா என அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் செய்தியாளர்கள் தரப்பில் பட்டிமன்றமே நடைபெறும்.

அம்மா இட்லி சாப்பிடவில்லை எனத் தொடங்கி பாமக சின்னம் ஆப்பிளுக்கு ஓட்டுப்போடுங்க என்றது வரை ஊடகத்திலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. கூட்டணிக்கட்சியான பாமகவின் சின்னம் மாம்பழம் என்பதை கூட மறந்து ஆப்பிள் எனச் சொன்னார். இப்படி இவர் பேசியதை ஒரு பெரிய லிஸ்டே தயார் செய்யலாம்.
இந்நிலையில், மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவின் இரட்டை குழல் துப்பாக்கி எனக் கூறியதோடு, தமிழகத்தில் அடுத்த 21 ஆண்டுகளுக்கு எங்கள் ஆட்சி தான் என அடித்துக் கூறினார். அதிமுகவை ஆட்டிவிடலாம், அசைத்துவிடலாம் என பல பேர் முயற்சி செய்ததாகவும், அது பலிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
டீக்கடை நடத்தி கடின உழைப்பால் அரசியலில் உயர்வுக்கு வந்தவர் ஓ.பி.எஸ்.என்றும், இதேபோல் விவசாய குடும்பத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியும் அரசியலில் அயராத உழைப்பால் முதல்வரானவர் எனவும் தெரிவித்தார். ஆட்சி நிர்வாகத்தை பற்றி இவர்களுக்கு என்னத் தெரியப்போகிறது என நினைத்தவர்கள் தான் இப்போது ஏமாற்றம் அடைந்துள்ளதாக பேசினார்.












Click it and Unblock the Notifications