செருப்பு வீச்சு.. பாஜகவின் "நாட்டுப் பற்று" சாயம் வெளுத்து போச்சு.. கேவலம்.. அமைச்சர் துரைமுருகன்
சென்னை: அராஜகத்தை கையில் எடுத்திருப்பது பாஜகவின் கேவலமான அரசியல் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் ராஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான மோதல் சம்பவத்தில் தமிழக வீரர் உள்பட 3 பேர் வீரமரணமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் டி புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் இந்த பயங்கரவாத தாக்குதலின் போது வீரமரணமடைந்தார்.
இவரது உடல் ஜம்மு காஷ்மீரிலிருந்து மதுரைக்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

பாஜகவினர்
அவர் அங்கிருந்த பாஜகவினரை பார்த்துவிட்டு "இவர்கள் ஏன் இங்கிருக்கிறார்கள், வீரருக்கு மரியாதை செலுத்த அவரது வீட்டுக்கு போய் செலுத்திக்கொள்ளட்டும், அரசு சார்பில் மரியாதை செலுத்தும்போது அவர்களும் செலுத்துவது புரோட்டோகாலில் இல்லையே" என தெரிவித்திருந்தார்.

போலீஸார்
இதையடுத்து போலீஸார் அவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தனர். அப்போது பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் அமைச்சரின் கார் மீது திட்டமிட்டே பாஜக பெண் நிர்வாகி ஒருவர் செருப்பை வீசி எறிந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் உடனே அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.

கூட்டணி கட்சி
இந்த சம்பவத்திற்கு திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் கடுமையாக கொந்தளித்தனர். மேலும் பல்வேறு இடங்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அமைச்சரின் கார் மீது செருப்பு வீச்சு
இந்த நிலையில் அமைச்சரின் கார் மீது செருப்பு வீச்சு தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 75-வது விடுதலை நாள் கொண்டாடப்படுகின்ற நேரத்தில், உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் அவர்களது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தேசியக் கொடி ஏற்றிய காரின் மீது காலணி வீசியிருக்கும் பா.ஜ.க.வினரின் அருவருக்கத்தக்க, அரசியல் பண்பாடற்ற செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராணுவ வீரர்
நாட்டிற்காக உயிர்நீத்த ஓர் ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்துவதிலும் இதுபோன்று அரசியல் ஆதாயம் தேடும் அநாகரிகச் செயலில் ஈடுபட்டு, அராஜகத்தை பா.ஜ.க.வினர் கையிலெடுத்திருப்பது கேவலமான அரசியல். அது ஒருவழிப் பாதையல்ல என்பதை பா.ஜ.க.வினர் உணர வேண்டும் என எச்சரிக்கிறேன்.

ஜனநாயகத்தில் நம்பிக்கை
ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாமல், அராஜகத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடி விடலாம் என்று தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் கனவு காண வேண்டாம். ராணுவ வீரரின் உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தச் சென்ற அமைச்சரின் காரின் மீது தாக்குதல் நடத்தி - உயிரிழிந்த ராணுவ வீரரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் பா.ஜ.க.விற்கு நாட்டுப்பற்று பற்றிப் பேசத் துளியும் அருகதை இல்லை என்பதோடு, இச்சம்பவத்தின் வாயிலாக அந்தக் கட்சியின் "நாட்டுப்பற்று" சாயம் வெளுத்துப் போயிருக்கிறது.

செருப்பு வீசுவது
செருப்பு வீசுவது, சிலைகளைச் சேதப்படுத்துவது போன்ற அசிங்க அரசியல் தவிர வேறு எதுவும் பா.ஜ.க.வுக்குத் தெரியாது என்பது அவர்களது பண்பாடற்ற நடவடிக்கைகளால் தெரிகிறது. பதற்றத்தைப் பற்ற வைத்து வன்முறைகள் மூலமாகக் கட்சியை வளர்க்கலாம் என்று அவர்கள் நினைத்தால் மக்கள் மன்றத்தில் அவர்கள் அரசியல் அநாதைகளாவது நிச்சயம் என எச்சரிக்கிறேன்.
Recommended Video

ஊரெல்லாம் தேசியக் கொடி
ஊரெல்லாம் தேசியக் கொடி ஏற்ற வேண்டிய நேரத்தில், தேசியக் கொடி பறந்த காரில் செருப்பு வீசியதன் மூலமாக பா.ஜ.க.வின் கீழ்த்தர அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள இயக்கம். சட்டத்தின் ஆட்சியை கடைப்பிடிக்கும் இயக்கம். அமைச்சரின் கார்மீது காலணி வீசியவர்கள், தூண்டி விட்டவர்கள், துணைபோனவர்கள் ஆகியோர் மீது காவல்துறை உரிய நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருப்பதால் தி.மு.க. தொண்டர்கள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications