திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை? என்கிட்ட ஏது அவ்வளவு பணம்? மறுத்த கே.என்.நேரு
சென்னை: திமுக அமைச்சர் கே.என்.நேரு பெயரில் திருப்பதி தேவஸ்தானத்தில் அன்னதானம் செய்ய ரூ 44 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதை அவர் மறுத்துள்ளார். மேலும் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விழா நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகிறார்கள்.
பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கூட ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவர்கள் வயிறார உணவு அருந்த 3 வேளையும் திருமலையில் மாத்ரூ ஸ்ரீதரிகொண்டா வெங்கமாம்பாள் அன்னதான கூடத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாத திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள், நன்கொடைகள் மற்றும் அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தில் கிடைக்கும் வட்டியில் இருந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.
மாத்ரூ ஸ்ரீ வெங்கமாம்பாள் கூடம் தவிர திருமலையில் உள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜர் கோயில், விண்ணு நிவாசம், ராம் பகீசா, மாதவம் விடுதிகள் என பல இடங்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் பயனடைகிறார்கள்.
அன்னதானத்திற்கு நிறைய பேர் நிதியுதவியும் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு நாள் அன்ன பிரசாதத்திற்கு நன்கொடை வழங்க விரும்புவோர் ரூ 44 லட்சம் செலுத்த வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
காலை சிற்றுண்டிக்கு மட்டும் என்றால் ரூ 10 லட்சமும், மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு ரூ 17 லட்சம் என நன்கொடை வழங்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்திருந்தது.
ஒரு நாளோ அல்லது 3 வேளைகளில் ஒரு வேளையோ அன்னதானம் வழங்கினால் அவர்களது பெயர் அங்கிருக்கும் டிஜிட்டல் பலகைகளில் வெளியிடப்படும். இந்த நிலையில் திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேரு ரூ 44 லட்சம் நன்கொடை வழங்கியதாக கடந்த 9ஆம் தேதி அங்கிருந்த பலகையில் வெளியானது.
இந்த செய்தி சமூகவலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நேரு, "நான் பணம் கொடுக்கக் கூடாதா, கொடுத்திருந்தால் விமர்சனம் செய்யட்டும். நான் நல்லவன் என யாரும் சொல்ல மாட்டார்கள்" என கோபமாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் கே.என்.நேரு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நான் திருப்பதி கோயிலுக்கு நன்கொடை கொடுக்கவில்லை. என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. எனக்கு தெரியாமல் என் குடும்பத்தினர் செய்துள்ளனர். எனக்கு தெரிந்திருந்தால் தடுத்து நிறுத்தியிருப்பேன்" என தெரிவித்திருந்தார். இரு பிரஸ் மீட்களிலும் கே.என்.நேரு முரணான விளக்கங்களை அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications