"இன்னும் ஒரே மாதம்.. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவடையும்!" கே.என்.நேரு நம்பிக்கை
சென்னை: வரும் செப். மாதம் பருவமழை தொடங்கும் முன்பு சென்னையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடிக்க உத்தரவிட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார் தற்போது சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், மீதமுள்ள பணிகளும் அடுத்த ஒரு மாதத்திற்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சென்னையில் மழை பெய்தாலே சாலைகளில் மழை நீர் தேங்குவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் உட்பட அனைவருமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக நிலைமை சற்று மேம்பட்டது. இருப்பினும், கடந்தாண்டு பெய்த கனமழையால் மொத்த சென்னையிலும் நீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதுபோல நிகழாமல் இருக்கத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆலோசனைக் கூட்டம்: இன்றைய தினம் சென்னை, கலைவாணர் அரங்கில் மாநகராட்சிகள், நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்குக் கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமைச்சர் நேரு, நீர்நிலைகளில் காணப்படும் ஆகாயத் தாமரையை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அமைச்சர் நேரு: அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, "சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் ஏற்கனவே 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மற்ற பணிகளையும் அடுத்த ஒரு மாதத்தில் முடிக்க உத்தரவிட்டுள்ளோம்.
அதேநேரம் கொசஸ்தலை ஆறு குறித்து பணிகள் முடிக்க இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது.. இப்போது வரை கொசஸ்தலை ஆறு தொடர்பான பணிகள் 80 சதவீதம் வரை முடிக்கப்பட்டு இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
நடவடிக்கை: மேலும், மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மெட்ரோ ரயிலுக்காகத் தோண்டிய பள்ளத்தில் உள்ள தண்ணீரை எடுக்கும் பணிகளை மெட்ரோ நிர்வாகமே கையாண்டு வருவதாகத் தெரிவித்த அவர், தேவையான இடங்களில் மோட்டார்கள் வைத்தும் அகற்றப்படும் என்றும் இதற்காக மோட்டர்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வரும். செப் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இப்போது தான் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் நல்ல மழை இருக்கும். இந்த வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு, அதாவது செப்டம்பர் மாதம் முன்பே அனைத்து பணிகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications