முகவர்களுக்கு கட்டுப்பாடு... தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லை... உயர்நீதிமன்றத்தை நாடிய அமைச்சர்..!
சென்னை: வாக்கு எண்ணிக்கை மையங்களில் முகவர்களுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விவகாரத்தில், தேர்தல் ஆணையம் உரிய பதிலளிக்கவில்லை எனக் கூறி உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
அவர் தொடர்ந்துள்ள வழக்கு வரும் திங்கள்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2ம் தேதி எண்ணப்பட உள்ளன.
இந்நிலையில், 77 வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிடக் கோரி, தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதாகவும், இரண்டு அறைகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதாகவும், கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், 77 வேட்பாளர்களின் முகவர்களையும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கும்போது தனி மனித விலகல் பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்கு எண்ணிக்கையை மூன்று அறைகளில் நடத்த வேண்டும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும், மருத்துவ குழுவை பணியமர்த்த வேண்டும், கிருமிநாசினி வைக்க வேண்டும், முக கவசம் அணியாதவர்களை அனுமதிக்க கூடாது எனக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை எனக் கூறியுள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் விஜய பாஸ்கர் தரப்பில், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications