நாகை இல்லை.. நாகூர் மருத்துவமனையில்தான் பிரசவம் வார்டு இருக்கு.. தவெக விஜய்க்கு அமைச்சர் மா.சு பதில்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாகப்பட்டினத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்கள் இல்லை என்று விமர்சித்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தவெக தலைவர் விஜய்யின் பேச்சு, யாரோ எழுதிக் கொடுத்து படிப்பதுபோல் உள்ளது. நாகை மருத்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்கச் சொல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. முதல் முறையாக தேர்தல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தனது முதல்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கிய அவர் இன்று நாகையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாகையில் இன்று மக்கள் மத்தியில் பேசிய தவெக தலைவர் விஜய், "வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை போன்ற சுற்றுலாத் தளங்களை மேம்படுத்தினால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்களே இல்லையாம். நாகை புதிய பேருந்து நிலையம் சுத்தமாக இல்லை, ரயில் நிலையத்தில் வேலைகள் தாமதமாக நடக்கின்றன" என்று குற்றச்சாட்டினார்.
இந்நிலையில் விஜய் விமர்சனத்துக்கு பதில் அளித்துள்ளார் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தவெக தலைவர் விஜயின் பேச்சு, யாரோ எழுதிக் கொடுத்து படிப்பதுபோல் உள்ளது. நாகை மருத்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்கச் சொல்லுங்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நலம்காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாகை மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு இல்லை. நாகூர் மருத்துவமனையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைத்தபிறகு 500 படுக்கை வசதியுடன் பிரசவத்துக்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு சென்று விஜய்யை பார்க்கச் சொல்லுங்கள். அல்லது விஜய் கட்சியினர் அங்குச் சென்று பார்க்கச் சொல்லுங்கள். நாகை மருத்துவமனையில் பிரசவத்துக்கு மருத்துவர்கள் இல்லை என்று சொல்வது, யாரோ எழுதிக் கொடுத்துப் படிப்பதுபோல் உள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையைப் பூட்டுப் போடுவோம் என அன்புமணி பேசியது பற்றிய கேள்விக்கு, "அன்புமணி அறியாமையில் பேசுகிறார்.அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் புது மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மருத்துவங்களும் கொள்முதல் செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. ஒரு மருத்துவராக இருந்துகொண்டு மருத்துவமனை திறக்க வேண்டுமே தவிரப் பூட்டுப் போடுவோம் என்று சொல்வது அறியாமையின் உச்சம்" என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications