போதி தர்மருக்கு காஞ்சியில் நினைவு மண்டபம்? திமுக MLA கேள்விக்கு அமைச்சர் சொன்ன பளிச் பதில்!
சென்னை: பல்லவ மன்னர் வம்சத்தின் இளவரசர் போதி தர்மருக்கு காஞ்சிபுரத்தில் நினைவு மண்டபம் அமைக்கும் திட்டமும், கருத்தும் தமிழக அரசிடம் இல்லை என அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் காஞ்சிபுரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இதனைக் கூறினார்.

காஞ்சியை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான கந்தவர்மனுக்கு நந்திவர்மன், குமாரவிஷ்ணு, பௌத்தவர்மப் பல்லவன், என மூன்று மகன்கள் இருந்தனர். இதில் மூன்றாவது மகனான பௌத்தவர்மப் பல்லவன் தான் போதி தர்மர். பல்லவ மன்னர் குடும்பத்தில் இளவரசராக இருந்திருக்க வேண்டியவர் இளம் வயதிலேயே துறவறம் பூண்டும் புத்த மத துறவியாக மாறி சீனாவில் புத்த மதத்தை வளரச் செய்தார்.
காஞ்சிபுரத்திலிருந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பயணம் செய்து, போதி தர்மர் சீனாவை சென்றடைந்தார் என்பது வரலாற்று தகவலாக கூறப்படுகிறது. சீனாவின் குவாங்சூ நகரில் வாழ்ந்த போதி தர்மர் புத்த மதத்தை சீனா முழுவதும் பரப்பினார். அதேபோல் குவாங்சூ நகரில் லியாங் வம்ச மன்னர் உதவியுடன் ஹுவாலின் புத்தர் கோயிலை போதி தர்மர் தோற்றுவித்தார். இந்தக் கோயிலின் நுழைவு வாயிலில் போதி தர்மருக்கு 75 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் சீனா சென்றாலும் இதைக் காண முடியும்.
போதி தர்மர் சிலை அருகே மேற்கிலிருந்து வந்த புத்தமத துறவி என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கிறது. புத்த மத குருக்களில் கடைசி குரு போதி தர்மர் என்றும் மொத்தம் 28 குருமார்கள் புத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்பினார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் தற்காப்பு கலைகள் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தவர் போதி தர்மர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட போதி தர்மருக்கு காஞ்சிபுரத்தில் பிரம்மாண்ட நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் எழிலரசன் எம்.எல்.ஏ. சட்டசபையில் இது தொடர்பான கேள்வியை இன்று எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் போது தான், போதி தர்மருக்கு காஞ்சியில் நினைவு மண்டபம் அமைக்கும் கருத்துருவும், திட்டமும் இப்போதைக்கு அரசிடம் இல்லை என அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறிவிட்டார்.
இதனிடையே செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக் கோரிக்கையின் போது போதி தர்மருக்கு காஞ்சியில் நினைவுச்சின்னம் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளிவந்தாலும் வரலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications