எல்.முருகனும் நானும் ஒன்னா? அவர் பேருக்கு கீழ் என் பெயரா? கொந்தளித்த பொன்முடி! என்ன காரணம் தெரியுமா?
சென்னை : அரசை ஆலோசிக்காமல் காமராஜர் பல்கலைகழக பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது எனவும், மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அதிரடியாகக் கூறியுள்ளார்.
Recommended Video
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சனாதானம் குறித்து பேசியதும், பின்னர் திராவிடம் குறித்து பேசியதும் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக ஆளும் திமுக அரசுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மோதல் போக்கினையே கடைப்பிடித்து வருகிறார். நாளுக்கு நாள் இருதரப்புக்கும் இடையான மோதல் போக்கு தீவிரமடைந்து வரும் நிலையில் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன

மதுரை காமராஜர் பல்கலை
இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் பேசியுள்ள அவர்," ஆளுநரின் செயல்பாடு பாஜகவின் பிரச்சாரம் போல உள்ளது.

அமைச்சர் பொன்முடி
ஒன்றிய அரசால் நியமிக்கப்படுவதால் ஒன்றிய ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாநில அரசின் கொள்கைகளை, திட்டங்களை நிறைவேற்றுவதே ஆளுநரின் கடமை. பட்டமளிப்பு விழா தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அரசை ஆலோசிக்காமல் காமராஜர் பல்கலைகழக பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம், ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலை புகுத்துகிறார். இந்திய நாட்டின் வரலாற்றை கொஞ்சமாவது ஆளுநர் படிக்க வேண்டும். ஆளுநர் எந்த ‘-ism' பின்பற்றுவேராக இருந்தாலும் 'Humanism' என்ற மனிதாபிமானத்தை பின்பற்ற வேண்டும். பட்டமளிப்பு விழாவுக்கு வேந்தர், இணைவேந்தர், இதன் பின்பு ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவது வழக்கம்.

நிகழ்ச்சி புறக்கணிப்பு
ஆனால் இந்த மரபு முறைகளை எதுவும் கடைபிடிக்காமல், கெளரவ விருந்தினராக இணை அமைச்சர் எல்.முருகன் அழைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? அதுவும் அவர் பெயருக்கு கீழ் என் பெயர் இடம்பெற்றிருக்கிறது. நான் தான் ப்ரோ சானாசலர். நான் ப்ரோ சான்சலர் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து, அதில் கலந்துகொள்வதாக இல்லை" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications