10 ஆண்டுகளில் தமிழகம் பசுமை மாநிலமாக மாறும்! சட்டப்பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்!
சென்னை: அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகம் பசுமை மாநிலமாக மாறும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்ற முதலமைச்சர் ஸ்டாலின் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
அதிமுக உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசும் போது வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இந்த தகவலை வெளியிட்டார்.

திண்டுக்கல் சீனிவாசன்
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன், கடந்த அதிமுக ஆட்சியில் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சந்தனமரம் வளர்ப்புத் திட்டம் தொடருமா என்றும் தேக்குமரம் வளர்ப்புக்கு அரசிடம் என்ன திட்டம் உள்ளது எனவும் வினவினார். மூலக் கேள்விக்கும் துணைக் கேள்விக்கும் சம்பந்தமே இல்லை என்றும் இது போன்று கேட்காதீர் எனவும் திண்டுக்கல் சீனிவாசனை சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார்.

வனப்பரப்பு
அதைத் தொடர்ந்து அதற்கு பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழகத்தில் 23.96 % ஆக உள்ள வனப்பரப்பை 33% என்கிற அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியிருப்பதால் அதற்கேற்ப வனத்துறை அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கட்ட முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

பசுமை மாநிலம்
அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகம் பசுமை மாநிலமாக மாறும் என்றும் தற்போது ஆண்டொன்றுக்கு சராசரியாக 32 கோடி மரக்கன்றுகளை நட வனத்துறை திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். அமைச்சரின் இந்த பசுமை மாநிலம் குறித்த அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பலத்த வரவேற்பு
பசுமை மாநிலம் என்ற இலக்கை நோக்கி தமிழகம் பயணித்து வருவதாக அமைச்சர் ராமச்சந்திரன் கூறிய தகவலை கேட்டு சட்டப்பேரவையில் மற்ற அமைச்சர்களும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.











Click it and Unblock the Notifications