அமைச்சர் நாசர் மகன் பதவி பறிப்பு.. 5 மாதங்களிலேயே மாநகர செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்த தலைமை!
அமைச்சர் நாசர் மகன் கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் எஸ்.எம். நாசரின் மகன் ஆசிம் ராஜா விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆவடி மாநகர திமுக செயலாளராக சன்.பிரகாஷ் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதி முதல் ஆவடி மாநகர திமுக செயலாளராக செயல்பட்டு வந்த ஆசிம் ராஜா 5 மாதங்களிலேயே மாற்றப்பட்டுள்ளது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரின் மகன் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது திருவள்ளூர் மாவட்ட திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் நாசர் மகன்
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி எஸ்.எம்.நாசரின் மகன் ஆசிம் ராஜா திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக ஆவடி மாநகரச் செயலாளராக செயல்பட்டு வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற திமுக உட்கட்சி தேர்தலில் ஆசிம் ராஜா ஆவடி மாநகர செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆசிம் ராஜா, ஆவடி மாநகராட்சி கவுன்சிலராகவும், மண்டலக்குழு தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

பொறுப்பிலிருந்து விடுவிப்பு
இந்த நிலையில் ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் நாசர் மகன் ஆசிம் ராஜா விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக ஆவடி மாநகர திமுக செயலாளராக சன்.பிரகாஷ் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

போலீசில் புகார்
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை அமைச்சர் ஆவடி நாசரின் மகன் ஆசிம் ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கும்பலாகச் சென்று அகற்றியதாக சமீபத்தில் பாஜக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

பாஜக புகார்
மேலும், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் படங்களை அகற்றும் அகம்பாவம், ஆணவம், திமிர் எங்கிருந்து வந்தது? இந்த குண்டர்களை தமிழ்நாடு காவல்துறை உடனே கைது செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications