இனி சிக்கல் இல்லை.. ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை- அமைச்சர் அறிவிப்பு
சென்னை : ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் பெறும் வசதி வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் உணவு பற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி.
அப்போது பேசிய அவர், ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு சரிபார்த்தலில் சிக்கல் ஏற்பட்டு வருவதால், மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கருவிழி பதிவு முறை கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மின்னணு பதிவில் சிக்கல்
மேலும் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "தமிழகத்தில் 2.15 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் உள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் பொது விநியோகம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. பொது விநியோகம் கணினிமயமாக்கப்பட்ட பின், ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, நியாய விலைக்கடைகளில் விற்பனை முனைய இயந்திரம் வாயிலாக, விரல் ரேகை பதிவு சரிபார்க்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

கருவிழி பதிவு மூலம்
விரல் ரேகை பதிவு சரிபார்த்தலில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதைப் பலமுறை சரி செய்த போதும் இந்தக் கோளாறு தொடர்கிறது. இதனால், மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக கருவிழி பதிவு மூலம் மூலம் ரேஷன் பொருட்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் குடும்ப அட்டையுடன் ஆதார் இணைப்பு இருப்பதால், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இது ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 15ஆம் தேதிக்குள்
அதேபோல தமிழகத்திலும் செயல்படுத்தப்படும். அக்டோபர் 15-ம் தேதிக்குள் தமிழகத்தில் சில நியாயவிலைக் கடைகளில் கருவிழி பதிவு அடிப்படையில் பொருட்களை வழங்கும் முறை சோதனை அடிப்படையில் தொடங்கப்படும். இது சாத்தியமானால் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதி
மாற்றுத் திறனாளிகள் வயது முதிர்ந்தவர்களுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நபர் யாரை பரிந்துரை செய்கிறாரோ அந்த நபரின் பெயரை ரேஷன் கடையில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் மாற்று நபர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications