அடாத மழையில் விடாது ஆய்வு! மேயர் பிரியா புட்போர்ட் அடிச்சதுக்கு இது தான் காரணம்! சேகர்பாபு விளக்கம்!
சென்னை : சென்னையில் மாண்டஸ் புயல் தொடர்பான ஆய்வு பணியின் போது முதல்வரின் கான்வாயில் சென்னை மேயர் பிரியா தொங்கிக் கொண்டே பயணம் செய்தது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு ஆளான நிலையில், அவர் எதற்காக அவ்வாறு பயணம் செய்தார் என்பது குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்திருக்கிறார்.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக இருந்து அதி தீவிர புயலாக மாறிய மாண்டஸ் ஒன்பதாம் தேதி இரவு ஒன்பது மணிக்கு கரையை கடக்கத் தொடங்கியது. மணிக்கு 50 கிலோமீட்டரில் இருந்து 65 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசியது.
அதோடு சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்த நிலையில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

மாண்டஸ் புயல்
குறிப்பாக பட்டினப்பாக்கம் காசிமேடு ஆகிய பகுதிகளில் புயலின் கோரத்தாண்டவத்திற்கு படகுகள் சேதம் அடைந்ததோடு குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்தது. மாண்டஸ் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில் உடனடியாக அவை அகற்றப்பட்டது. இரவு முழுவதும் சுமார் ஒன்பதாயிரம் பணியாளர்கள் புயல் காரணமாக விழுந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தினர். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டதோடு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.

முதல்வர் ஆய்வு
குறிப்பாக காசிமேடு பகுதியில் பலத்த காற்று மற்றும் உயரமாக எழும்பிய அலை காரணமாக 50க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தன மீன்பிடி துறைமுகத்தில் நிற்கவைக்கப்பட்டு இருந்த படகுகள் சேதம் அடைந்ததால் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர் இதையடுத்து கடந்த பத்தாம் தேதி மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

மேயர் பிரியா
தென் சென்னை கொட்டிவாக்கம் பாலவாக்கம் வடசென்னையில் காசிமேடு ஆகிய பகுதிகளில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டதோடு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் முதல்வர் பயணம் செய்த பாதுகாப்பு கான்வாயில் தொங்கியபடி சென்றனர். அப்போது தன்னை வீடியோ எடுப்பதை பார்த்த மேயர் பிரியா முகத்தை மூடிக்கொண்டு சென்றார்.

விமர்சனம்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டது. மேயர் பிரியா மற்றும் திமுகவை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்த நிலையில் முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக காசிமேடு வந்தபோது அவர் வருவதற்கு முன்பாகவே மேயர் பிரியாவும் ஆணையர் கஜன் தீப் சிங் பேடி ஆகியோர் சென்றுவிட்டனர். அவர்களது வாகனம் துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் முதல்வரின் கார் உள்ளே வரத் தொடங்கியதை தெரிந்துகொண்டு நடந்தனர்

அமைச்சர் சேகர் பாபு
அப்போது முதல்வரின் வாகனம் வேகமாகச் சென்றதால் மேயர் பிரியா மற்றும் ஆணையர் கதந்திப் சிங் பேடி ஆகியோர் முதல்வரின் கான்வாயில் ஏறி தொங்கிக்கொண்டு பயணம் செய்தனர் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மேயர் பிரியாவுக்கு அமைச்சர் சேகர்பாபு ஆதரவளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு," காசிமேடு துறைமுகத்தில் ஆய்வின் போது முதல்வருடன் செல்ல வேண்டும் என்பதற்காக சென்னை மேயர் பிரியா துணிச்சலுடன் முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் ஏறினார்" என்றும் இதில் பெரிது படுத்துவதற்கு ஒன்றும் இல்லை" எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications