திருவண்ணாமலையில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்! கார்த்திகை தீபத்திற்கு தமிழக அரசு குட் நியூஸ்
சென்னை: திருக்கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுமா என்ற கேள்விக்கு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கு 40 லட்சம் பேர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அண்மையில் பெஞ்சல் புயலால் திருவண்ணாமலையில் மிக கனமழை பெய்தது. இதனால் தீபம் ஏற்றும் மலைபாதையில் மண் சரிவு ஏற்பட்டு அங்கே வீடு கட்டி வசித்து வந்த 7 பேர் மண்ணில் புதைந்து பலியாகிவிட்டனர்.
இந்த மீட்பு பணிகள் செய்து கொண்டிருந்த போதே அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுவதை பார்வையிட குறிப்பிட்ட நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் நெய், கொப்பரை உள்ளிட்டவைகளையும் எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு மண்ணின் ஸ்திரத்தன்மை குறித்த கேள்வி எழுந்திருந்தது.
இந்த நிலையில்தான் கடந்த 7, 8, 9 ஆகிய தேதிகளில் புவியியல் துறையின் தலைவர் சரவண பெருமாள் ராஜா தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் மலை பாதையை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடியது. அப்போது திருவண்ணாமலையை சேர்ந்த எம்எல்ஏ கு.பிச்சாண்டி கேள்வி நேரத்தில் பேசினார்.
அவர் , திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக மலை மீது தீபம் ஏற்ற அரசு எந்த மாதிரியான ஏற்பாடுகளை செய்துள்ளது என கேட்டார். அதற்கு அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், சங்க காலம் தொட்டே திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
இந்த முறை தீபத்தை காண 40 லட்சம் பேர் கூடுவர் என எதிர்பார்க்கப்படுதிறது. இதையொட்டி கடந்த 18.10.2024 அன்று கிரிவல பாதையில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு நடத்தினார். அத்துடன் துறை அமைச்சரான என்னுடனும், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருடன் 6 ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டதும் உதயநிதி நேரில் வந்து ஆய்வு செய்தார். சான்றோர் காலத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த தீபத் திருநாள் விழாவில் எந்த தடையும் வரக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். அதனால் எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் திட்டமிட்டு விழாவை நடத்துமாறு தெரிவித்துள்ளார்.
மகா தீபம் ஏற்ற 350 கிலோ எடை கொண்ட கொப்பரையையும் 450 கிலோ நெய்யையும் 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது கொண்டு செல்ல தேவையான மனித சக்திகளை பயன்படுத்துமாறு முதல்வர் அறிவுறுத்தினார். எனவே வரும் டிசம்பர் 13 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் என்பதை துணை சபாநாயகருக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என சேகர்பாபு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications