களமும் தெரியாது, தரவும் தெரியாது.. அண்ணாமலையின் அமெரிக்க உரை.. செந்தில் பாலாஜி சுளீர் பதிலடி
சென்னை: சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அங்குள்ள தமிழக மக்களிடையே உரையாற்றினார்.
தற்போது அவர் ஆற்றிய உரைக்கு அரசியல் தலைவர்கள் பலர் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். அதாவது அவர் பேசியதில் தகவல் பிழைகள் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நேற்று திமுக எம்பி செந்தில் குமார் இது குறித்து அண்ணாமலைக்கு விளக்கமளித்திருந்த நிலையில், இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்க பயணம்
தனது உயர்கல்வி தொடர்பாக 2 வாரம் அமெரிக்கா சென்றிருந்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. இவ்வாறு இருக்கையில், அங்கு தமிழர்கள் மத்தியில் உரையாற்றினார். லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள தமிழர்கள் மத்தியில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து 'தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்' எனும் தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியிருந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து நேற்று (அக்.12) திமுக எம்பி செந்தில் குமார் விமர்சனம் தெரிவித்து அண்ணாமலையின் உரையில் உள்ள தவறான விமர்சனங்களை சுட்டிக்காட்டியிருந்தார்.

உரையாடல்
அதாவது லாஸ் ஏஞ்செல்சில் உரையாடிய அண்ணாமலை, "தமிழகத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 55 லட்சம் டாய்லெட்டுகள் 'ஸ்வெச் பாரத்' திட்டம் மூலம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராம மக்கள் தங்களுக்கு கௌரவம் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளனர்." என்று தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதே நேரம் மத்திய அரசின் இதர பல திட்டங்களையும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்வெச் பாரத்
இந்த வீடியோ குறித்து விமர்சனம் செய்து விளக்கமளித்த திமுக எம்பி செந்தில்குமார், "மத்திய அரசின் கீழ் கட்டப்பட்டுள்ள 55,11,791 கழிவறைகள் ரூ.12,000 என்கிற விகிதத்தில் கட்டப்பட்டுள்ளன. அதாவது ஒரு கழிவறைக்கு ரூ.12,000. நான் சவால் விடுகிறேன் இவ்வாறு கட்டப்பட்ட கழிவறைகளில் 95% பயனற்றுதான் கிடக்கிறது. ஏனெனில் ரூ.12,000க்கு நிச்சயம் ஒரு கழிவறையை கட்ட முடியாது. இது முற்றிலும் தோல்வியடைந்த திட்டம். இதன் மூலம் ரூ.66 ஆயிரம் கோடி வீணடிக்கப்பட்டுள்ளது." என்று விமர்சித்திருந்தார்.

மாவட்டங்கள்
இந்த சர்ச்சை ஓய்வதற்குள் மற்றொரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது. அதாவது, இதே கூட்டத்தில் அண்ணாமலை இந்தியாவில் மொத்தம் 900 மாவட்டங்கள் இருக்கிறது என்று பேசியிருந்தார். இதை குறிப்பிட்டு பல்வேறு விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் உருவாகியிருந்தன. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அண்ணாமலையை குறிப்பிட்டு, "களமும் தெரியாது; தரவும் தெரியாது" என்று கூறியுள்ளார்.

அமைச்சர் ட்வீட்
அவர் மேலும் கூறியுள்ளதாவது, "தமிழ்நாட்டில் உள்ள பூத் எண்ணிக்கை கூட பாஜக மாநில தலைவருக்குத் தெரியாது! 68,019 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் 66,000தான் உள்ளன என்பார். களமும் தெரியாது; தரவும் தெரியாது. சமூக ஊடகத்தில் 'படம்' ஓட்டி விளம்பரம் செய்து கொண்டிருப்பவருக்கு தேர்தலில் தமிழ்நாடு பாடம் கற்பிக்கும்!" என்று கூறியுள்ளார். தற்போது இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications