'ஆல் இல் ஆல் அழகுராஜா' கேபி முனுசாமி.. மின்வெட்டு பற்றி உளறாமல் ஓரமாக விளையாடுங்க.. செந்தில் பாலாஜி
சென்னை: தமிழ்நாட்டில் ஏற்படும் மின்வெட்டு குறித்து விமர்சித்திருந்த அதிமுகவின் கே பி முனுசாமியை கடுமையாக விமர்சித்துள்ள மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, புள்ளி விவரத்துடன் விவாதிக்க முடியவில்லை என்றால் உளறாமல் ஓரமாக விளையாடிக்கொண்டு இருங்கள் என மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக இணையத்தில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த ஆட்சியில் மின் பாரமரிப்பு பணிகள் முறையாக நடத்தவில்லை என்றும் இதனாலேயே மின்தடை ஏற்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

கே.பி.முனுசாமி
இந்நிலையில், நேற்று கிருஷ்ணகிரி எம்எல்ஏ அலுவலகத் திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தமிழக மக்களிடம் கொங்கு நாடு என்ற பிரிவினை விதைகளை விதைக்க வேண்டாம் என்றும் இப்படி ஒரு விசமத்தனமான சிந்தனையில் இறங்குவது என்பது நாட்டுக்கு நல்லதல்ல என்றும் அவர் கூறியிருந்தார்,

செந்தில் பாலாஜி மீது தாக்கு
மேலும், பேசிய அவர், "அதிமுக அரசு முடியும் போது தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாகத்தான் கொடுத்தோம். ஆனால், இப்போது மின்துறை அமைச்சராக இருப்பவர் கடந்த 9 மாதங்களாகப் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை எனக் கூறுகிறார். இப்படி அதிமுக மீது பழி போடவேண்டாம். இது மின்சார அமைச்சரின் செயல்பாட்டு எப்படி இருக்கிறது என்பதையே காட்டுகிறது" என விமர்சித்திருந்தார்,

பதிலடி
இதற்கு தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "தன்னை ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜாவாக காட்டிக்கொள்ள விழையும் கே பி முனுசாமி, இல்லை, பதவி சுகத்துக்காக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தோள்களில் குழந்தை போல மாறி மாறி சவாரி செய்யும் பேபி முனுசாமி, செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

மனப்பாடமாகச் சொல்ல வேண்டும்.
மாதங்களாகப் பராமரிப்பு பணிகள் நடைபெறாத காரணத்தால் உண்டான விளைவுகள் என்ன என்பதை பலமுறை புள்ளி விவரங்களுடன் விளக்கிவிட்டேன். அப்போதெல்லாம் மூளையை முதுகு பக்கமும், முகத்தை மூடின கதவு பக்கமும் வைத்திருந்திருந்தீர்களோ? கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்திருந்தால், ஏன் 4.5 லட்சம் விவசாய இணைப்புகள் தரவில்லையென எடப்பாடி பழனிசாமியிடமும் தங்கமணியிடமும் காரணங்களை கேட்டு ஒரு 80 பக்க நோட்டில் குறித்துக்கொண்டு முனுசாமி மனப்பாடமாகச் சொல்ல வேண்டும்.

அதிமுக ஆட்சியில் மின்வெட்டு
எடப்பாடியின் ஆட்சியில் மின் உற்பத்திக்காக துவங்கப்பட்ட திட்டங்கள் எவை? திட்டங்களின் மதிப்பீட்டு தொகை எவ்வளவு? அதற்காக செலவு செய்யப்பட தொகை என்ன? அந்த திட்டங்களால் எத்தனை மெ.வா மின்சாரம் தயாரிக்கப்பட்டது? அந்த திட்டங்களின் இன்றைய நிலை என்ன என்பதை முனுசாமி சொல்ல வேண்டும். எருதுக்கு பதிலாக ஏரோப்ளேனை கட்டி ஏர் ஓட்ட வேண்டுமென பேராசைக் கொண்ட முனுசாமி, சென்ற அதிமுக ஆட்சியில் எத்தனை லட்ச முறைகள் மின்வெட்டுகள் ஏற்பட்டதென எண்ண ஆரம்பித்தால், 3 வாரம் கழித்து தான் உணவு உண்ண முடியும்.

ஓரமாக விளையாடுங்கள்
பதவி சுகத்துக்காக ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என அணி மாறி கழுத்தை அறுத்த முனுசாமி , விசுவாசம் பற்றி பேசுவது, நரி நியாயம் பேசுவது போல இருக்கிறது. ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு MLAவா மாற குட்டிக்கரணங்கள் அடித்த முனுசாமி நிர்வாக திறன் பற்றி பேசலாமா? ஆளுமைமிக்க தலைவரிடம் நான் பணியாற்றுகிறேன், எந்த கேள்வியும் எதிர்கொள்ளும் நெஞ்சுரம் தலைவர் தந்தது. புள்ளி விவரத்துடன் என்னுடன் விவாதியுங்கள். இல்லையெனில், இப்படி எதுவுமே தெரியாமல் உளறாமல், உங்களில் யார் அடுத்த அடிமையென ஓரமாக விளையாடிக்கொண்டு இருங்கள்" என மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications