“நச்சுனு சொன்னீங்க”.. டிஎம் கிருஷ்ணா கருத்துக்கு ஆதரவாக அமைச்சர் டிஆர்பி ராஜா ட்வீட்!
சென்னை: கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் பேட்டியை பகிர்ந்து அவரது கருத்தை வழிமொழிந்துள்ளார் திமுக அமைச்சர் டிஆர்பி ராஜா.
சென்னை மியூசிக் அகாடமி சார்பில், இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்த ஆண்டு கர்நாடக இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி, வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் 98வது மார்கழி இசை நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியாருக்கு ஆதரவாகப் பேசும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்படவுள்ளதற்கு கர்நாடக இசைக் கலைஞர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம்.கிருஷ்ணா முன்வைத்து வருகிறார் எனவும் பெரியாரைப் போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது எனக் கூறி, விருது வழங்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக கர்நாடக இசைக் கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் அறிவித்தனர்.
இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. டிஎம் கிருஷ்ணாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விவாதங்கள் நடந்து வருகின்றன. சாதி ஆதிக்க சிந்தனை காரணமாகவே டி.எம்.கிருஷ்ணாவை சிலர் எதிர்த்து வருவதாக விமர்சிக்கப்படுகிறது. உயர்சாதியினர் தாண்டி கர்நாடக சங்கீதத்தை எடுத்துச் செல்லும் டி.எம்.கிருஷ்ணா மீது வன்மத்தைக் கொட்டுகின்றனர் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
டிஆர்பி ராஜா பதிவு: டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆதரவாக தமிழக முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலினும் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக அமைச்சரும், திமுக ஐடி விங் மாநில செயலாளருமான டி.ஆர்.பி.ராஜா, கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா பேட்டி ஒன்றை பகிர்ந்து, அவரது கருத்தை வழிமொழிந்து, அவர் கூறியுள்ளது தெளிவான கருத்து எனப் பாராட்டியுள்ளார்.
அதில் பேசும் டி.எம்.கிருஷ்ணா, "நான் ஒரு கர்நாடக இசைக்கலைஞர். ஆனால் எனது அரசியல் நிலைப்பாடுகளுக்காக என்னை அவர்கள் வெறுக்கிறார்கள். அது என்னை விட கர்நாடக இசை உலகத்தை பிரதிபலிக்கிறது. கர்நாடக இசை உலகில் உள்ள பெரும்பாலானோர், ஒரு குறிப்பிட்ட அரசியல் சமூக நிலைப்பாட்டையே, கர்நாடக இசைக் கலைஞர்கள் எடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். கர்நாடக இசை உலகில் பலதரப்பட்ட அரசியல் சமூக நிலைப்பாடுகள் கொண்டவர்களும் இருக்க முடியும் என்பதையே ஏற்க மறுக்கின்றனர்." எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் ஆதரவு: முன்னதாக, டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றி தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது. இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.
பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள். கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.
டி.எம் கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலை கலக்க வேண்டாம். விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை" எனத் தெரிவித்திருந்தார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications