தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்த செய்தி உண்மையா? அமைச்சர் விஜயபாஸ்கர் தரும் விளக்கம் என்ன?
சென்னை: தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்த செய்தி உண்மையா என்ற கேள்விக்கு அது தவறு என்று அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுடன் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அமைச்சரும், சுகாதாரத் துறை செயலாளரும் செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் செல்கிறார். இது எங்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறது.

தமிழகம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் பாராட்டினார். சஞ்சீவனி திட்டம் தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் 35 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளார்கள். தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளார்கள் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிறது.

செய்தி தவறு
இது போன்ற பொய்த் தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். அனைத்து தகவல்களையும் தமிழக அரசு வெளிப்படையாக தெரிவித்து வருகிறது. தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் பலியானதாக கூறும் செய்தி தவறானது. இது குறித்து ஆய்வு செய்து எத்தனை பேர் என்பதை அறிவிப்போம்.

தமிழகத்தில் பலி
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பலி எண்ணிக்கையும் குறைந்தும் டெஸ்டிங் எண்ணிக்கை அதிகரித்தும் உள்ளதாக மத்திய அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார். நோயால் பாதிக்கப்படும் எண்ணிக்கையை குறைத்து காட்ட வேண்டும் என்றால் சோதனையை குறைக்கலாம். ஆனால் நாங்கள் அதிகரித்து வருகிறோம்.

மருந்து
தமிழகத்தில் இந்த கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் Tocilizumab, remdesvir, enoxaprin மருந்துகளை மருந்து நிறுவனங்கள் தனியாருக்கு அதிகவிலைக்கு விற்கக் கூடாது. ஒரு வேளை மீறி விற்பனை செய்தால் மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications