உதயநிதி ஸ்டாலினை சந்திக்க படையெடுக்கும் அமைச்சர்கள்! அப்பாயின்ட்மெண்ட் கேட்ட முக்கியப் பிரமுகர்கள்!
சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக அமைச்சர்கள் படையெடுத்து வருகின்றனர்.
அமைச்சர்கள் கே.என்.நேருவும், சேகர்பாபுவும் முதல் ஆளாக நேற்று பிற்பகலே உதயநிதிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக் கூறிய நிலையில் அவர்களை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று மாலையே உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அவர்களை தொடர்ந்து அமைச்சர் அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதன், செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

திமுக இளைஞரணி
இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக இளைஞரணி என்ற புதிய அணியை உருவாக்கிய பெருமை திமுகவையே சேரும். கோபாலபுரத்தில் இருந்த ஒரு முடிதிருத்தகத்தில் கோபாலபுரம் இளைஞர் திமுக என்று தொடங்கப்பட்ட சிறு அமைப்பானது, 1980ஆம் ஆண்டு திமுக இளைஞரணி என்ற பெயரில் மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. அதன் அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து படிப்படியாக அந்த அணியை வளர்த்தெடுத்து அதன் செயலாளராக பல்லாண்டு காலம் பணியாற்றினார் ஸ்டாலின்.

மீண்டும் பதவி
அதன் பிறகு அப்பதவி வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஸ்டாலினை காட்டிலும் அதிக முனைப்போடு இளைஞரணி பணிகளை கவனித்து வந்த உதயநிதி, லட்சக்கணக்கான புதிய உறுப்பினர்களை இணைத்து ஸ்டாலினிடம் பாராட்டு பெற்றார். இந்நிலையில் மீண்டும் 2வது முறையாக உதயநிதி ஸ்டாலினே திமுக இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

துரைமுருகனுடன் சந்திப்பு
அவருடன் 8 பேர் புதிய துணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். தனக்கு இளைஞரணி செயலாளர் வழங்கப்பட்டதை அடுத்து திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை நேற்று பிற்பகல் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது அங்கிருந்த அமைச்சர்கள் கே.என்.நேருவும், சேகர்பாபுவும் முதல் ஆளாக உதயநிதிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக் கூறி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டுக்குச் சென்று அவரை நேரில் சந்தித்த உதயநிதி வாழ்த்து பெற்றார்.

அமைச்சர்கள் சந்திப்பு
இதனிடையே அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, வெள்ளக்கோவில் சாமிநாதன், செஞ்சி மஸ்தான் என அடுத்தடுத்து உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்திப்பதற்காக படையெடுத்து சென்றனர். அதேபோல் திமுகவில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் பலரும் உதயநிதியை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு காத்திருக்கின்றனர். இதனால் உதயநிதி ஸ்டாலினின் முகாம் அலுவலகம் பரபரப்பாக காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications