தை மாதம் புது பங்களாவில் பால் காய்ச்சும் விழா! உதயநிதி ஸ்டாலினுக்காக இரவு பகலாக நடக்கும் வேலை!
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள குறிஞ்சி இல்லத்தில் வரும் தை மாதம் பால் காய்ச்ச திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே குறிஞ்சி இல்லத்தில் தற்போது குடியிருந்து வரும் சபாநாயகர் அப்பாவு விரைவில் அருகாமை பங்களாவான மலரகம் இல்லத்துக்கு குடிமாறவுள்ளார்.
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் குறிஞ்சி இல்லத்தில் தான் குடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விசிட்டர்கள் அதிகம்
அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை பார்ப்பதற்காக கட்சியினர் கூட்டம் அதிகளவில் திரள்வதால் சென்னை ஆழ்வார்பேட்டை செனடாப் சாலை முழுவதும் காலை மாலை வேளைகளில் கார்கள் அணி வகுத்து நிற்கின்றன. இதுமட்டுமல்லாமல் முதல்வரை காணவும் பலரும் அங்கு வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் தான் உதயநிதி ஸ்டாலின், தனது அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள குறிஞ்சி இல்லத்துக்கு குடியேறவுள்ளார்.

குடிமாறுகிறார் அப்பாவு
நாம் ஏற்கனவே ஒன் இந்தியா தமிழில் கூறியிருந்ததை போல், உதயநிதி ஸ்டாலினுக்காக தாமாக முன்வந்து தனது குறிஞ்சி இல்லத்தை கொடுத்துவிட்டு மலரகம் பங்களாவுக்கு குடிமாறிச் செல்லவுள்ளார் சபாநாயகர் அப்பாவு. இதற்கு காரணம் குறிஞ்சி பங்களாவை பொறுத்தவரை சற்று விசாலாமனது. கார் பார்க்கிங் பிரச்சனைக்கு இடமிருக்காது. எவ்வளவு பேர் வந்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. இதனால் தான் அமைச்சர் உதயநிதிக்கு அந்த இல்லம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பால் காய்ச்சும் விழா
இதனிடையே முதலில் மலரகம் இல்லம் ரெடியானால் தான் சபாநாயகர் அப்பாவு குறிஞ்சி இல்லத்தை காலி செய்ய முடியும். இதனால் அவருக்காக மலரகம் இல்லத்தை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதையடுத்து உதயநிதிக்காக குறிஞ்சி இல்லத்தை தயார் செய்யும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.இம்மாதம் இறுதிக்குள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு சார்பில் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய பங்களாவில் பால் காய்ச்சி குடியேறுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

செண்டிமெண்ட்
இதே குறிஞ்சி பங்களாவில் தான் 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் குடியிருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் அந்த பங்களா உதயநிதிக்கு கிடைத்திருப்பது செண்டிமெண்டாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications