மிஸ் சென்னை போட்டி மோசடி வழக்கை ரத்து செய்ய கோரி மீரா மிதுன் வழக்கு.. தள்ளுபடி செய்த ஹைகோர்ட்
சென்னை: மிஸ் சென்னை போட்டியில் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக 50 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை மீரா மிதுனின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மீரா மிதுனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என காவல் துறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை மீரா மிதுன் தொடர்ந்திருந்த வழக்கில் கடந்த 2018- ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் மிஸ் சென்னை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டபோது, அதற்கான அரங்கில் தனியார் நிறுவனம் ஒன்றை பிரபலப்படுத்துவதாக கூறி, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா பட்டங்களை வென்ற தன்னிடம் தேனாம்பேட்டையை சேர்ந்த ரஞ்சிதா பத்ராத்ரி என்பவர் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும், அந்த நிகழ்ச்சி ரத்தானதால் பணத்தை திருப்பி தரவில்லை என தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகாரில் தன் மீது 2019 ஆம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

நீதிபதி
இந்த வழக்கு நீதிபதி ஆர் என் மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் நடிகை மீரா மிதுன் மீது ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளதாலும். மேலும் தற்போது தலைமறைவாகி உள்ள அவர் எங்கு உள்ளார் என தெரியவில்லை என்பதால், எனவே வழக்கை ரத்து செய்யக்கூடாது என ஆட்சேபனை தெரிவித்தார்.

வழக்கை ரத்து செய்ய கோரிக்கை
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மாடலிங் துறையில் இருருந்தவர் மீரா மிதுன். இவர் 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் நடிகையானார். இதையடுத்து தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தானா சேர்ந்த கூட்டம்
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் தான் நடித்த நிறைய காட்சிகளை கட் செய்து விட்டதாக ஆதங்கப்பட்டார். இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் தன்னை சூப்பர் மாடல் என்றே சொல்லிக் கொண்டு ஏகப்பட்ட அலப்பறைகளை செய்தார். ஒரு கட்டத்தில் பிக்பாஸ் டாஸ்கில் சினேகன் தன்னை தவறான இடத்தில் கை வைத்ததாக கூறி அழுதார். பின்னர் கமல் காட்டிய குறும்படத்தில் உண்மை வெளியே வந்தது.

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு
இந்த நிலையில் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி சமூகவலைதளத்தில் மீரா மிதுன் வீடியோ வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக நடிகை மீரா மிதுனும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத மீரா மிதுனுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து இந்த வழக்கில் ஆஜரான மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

மீரா மிதுனுக்கு பிடியாணை
இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாத மீரா மிதுனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தன் மகளை பாதுகாப்பாக மீட்டுத் தரும்படி நடிகை மீரா மிதுனின் தாயார் ஷியாமளா சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். மீரா மிதுன் தலைமறைவாகிவிட்டார். கடந்த 2 மாதங்களாக போலீஸார் தேடியும் அவரை காணவில்லை. இதனால் மீரா மிதுனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அனுப்பியுள்ளனர். எனவே மீரா மிதுன் இந்தியாவில் தேடப்படும் நபராக அறிவிக்கப்படுகிறார். இதனால் அவர் இந்தியாவை விட்டு எங்குமே செல்ல முடியாது.












Click it and Unblock the Notifications