ஸ்டாலின் தான் இந்தியாவுக்கே வழிகாட்டி! ஓராண்டு நிர்வாகத் திறமையை புகழும் தமிமுன் அன்சாரி!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்கிறார் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
மேலும் தனது சக்திக்கு அதிகமாகவே ஓடோடி உழைத்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள்.. அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.. அமைச்சர் சிவசங்கர் அதிரடி
திமுக ஆட்சி அமைத்து நாளை மறுநாளுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில் தமிமுன் அன்சாரி இவ்வாறு கூறியிருக்கிறார்.
திமுக ஆட்சி
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ளார். இந்த ஓராண்டு காலத்தில் அவரது செயல்பாடுகள் மற்றும் அவர் முன்னெடுத்த நடவடிக்கைகள் பற்றி பல்வேறு ஆளுமைகளிடம் அவர்களின் கருத்தறிந்து அதனை ஒன் இந்தியா தமிழ் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவருமான தமிமுன் அன்சாரியிடம் இது தொடர்பாக பேசிய போது அவர் கூறியதாவது;
இந்தியாவுக்கே வழிகாட்டி
"முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை அவர் இன்று இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். முதல்வராக பதவியேற்ற நாள் முதல் அவரது சக்திக்கும் அதிகமாக ஓடோடி உழைத்து வருகிறார். ஒவ்வொரு துறைக்கும் அதற்கேற்ற செயலாளர்களை அவர் நியமித்த விதம் பாராட்டத்தக்கது. இதேபோல் தலைமைச் செயலாளர் நியமனமாக இருக்கட்டும், காவல்துறை தலைவர் நியமனமாக இருக்கட்டும் எல்லாமே சிறப்புக்குரியதாக இருக்கிறது."
அமைதியான சூழல்
"எல்லா சமூக மக்களையும் அவர் ஒருங்கிணைத்து அமைதியான சூழலில் வழிநடத்திச் செல்கிறார். இதேபோல் திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் அவர் முன்னெடுக்கும் பணிகள் அனைத்தும் பாராட்டத்தக்கது. பல மாநிலங்களில் மதத்தை அடிப்படையாக வைத்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் வேளையில் தமிழகத்தில் அமைதியான சூழலை நிலவச் செய்துள்ளார். இதனால் தான் சொல்கிறேன், ஸ்டாலினை பொறுத்தவரை இந்தியாவுக்கே அவர் வழிகாட்டியாக திகழ்கிறார் என்று, இவ்வாறு தமிமுன் அன்சாரி முதல்வர் ஸ்டாலினின் ஓராண்டு செயல்பாடுகள் பற்றி தனது கருத்தை பதிவு செய்தார்.
நேரில் சந்திப்பு
முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்த ஸ்டாலினை தமிமுன் அன்சாரி நேரில் சந்தித்து தனது வாழ்த்தை தெரிவிக்க திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சீட் வழங்கப்படாத நிலையிலும் தமிமுன் அன்சாரி ஆதரவு தெரிவித்து பரப்புரை செய்தது குறிப்பிடத்தக்கது.