பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்களே.. உரிமை, சலுகை கிடைக்கும் - மு.க.ஸ்டாலின்
சென்னை: செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Recommended Video

இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக வீசி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனா தாக்கம் இருபதாயிரத்தை தாண்டிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
ஆக்சிஜன் சிலிண்டர், ரெமிடிசிவிர் மருந்துகளின் பற்றாக்குறை போன்றவை இருந்தாலும், மற்ற மாநிலங்களை போல உச்சத்தில் இல்லை. எனினும், தற்போது எகிறும் வைரஸ் தொற்றுகளால் மருந்துகளின் தேவைகளும் அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது.

கலக்கத்தில் தமிழகம்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மே 1 முதல் இரவு 10:00 முதல் அதிகாலை 4:00 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், நோய் பரவல் அதிகரித்து வருவதால், வரும் 6ம் தேதி அதிகாலை 4 மணி முதல், 20ம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு உத்தரவு
அதன்படி, அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களிலும் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. பயணியர், மெட்ரோ ரயில், தனியார், அரசு பஸ்கள், வாடகை டாக்சி ஆகியவற்றில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும், பொது மக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. வணிக வளாகங்களில் இயங்கும், பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர, தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி விற்பனை கடைகள் மட்டும், 'ஏசி' வசதியின்றி, பகல், 12:00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில், 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும்.

விழாக்களுக்கு தடை
மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல், செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அனைத்து உணவகங்களிலும், பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள், பகல், 12:00 மணி வரை மட்டுமே செயல்படலாம். உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுது போக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இப்படி பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்டாலின் அறிவிப்பு
இந்த நிலையில், வரும் 7ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலின், பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன.

உரிமை, சலுகை
கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம், மேற்குவங்கம், பீகார், ஒடிசா, உத்தரகண்ட், ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழகத்திலும் தற்போது பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications