"இனி ஆளுநர் உரையே வேண்டாம்.." சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் உரையை வாசிக்காமலேயே கவர்னர் ரவி அவையில் புறப்பட்டுச் சென்றார். இது பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடரைத் தொடங்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சில மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், இந்த சட்டசபையின் கடைசி கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அடுத்த மாதம் இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. இன்றைய தினம் ஆளுநர் உரையுடன் அவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

எப்போதும் மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடனேயே தொடங்கப்பட வேண்டும். அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் அவைக்கு வருகை தந்தார். அவருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. போலீஸ் பாண்ட் வாத்தியங்கள் முழங்க ஆளுநர் ரவிக்கு வரவேற்பு தரப்பட்டது. சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்றார்.
சட்டசபை கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்தவுடனேயே தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதைக் காரணமாகச் சொல்லி ஆளுநர் ரவி அவையில் இருந்து வெளியேறினார். ஆளுநர் உரையை வாசிக்காமலேயே அவர் வெளியேறினார். அதைத் தொடர்ந்து எழுந்த முதல்வர் ஸ்டாலின், மக்கள் மன்றத்தை ஆளுநர் அவமதிப்பதாகத் தெரிவித்தார். மேலும், ஆளுநர் உரை வாசிக்கப்பட்டதாகக் கருதப்படும் எனச் சொல்லி தீர்மானத்தையும் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் உரையுடன் சட்டசபையைத் தொடங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார். ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடரைத் தொடங்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவர தனது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். இதற்காக, நாடு முழுவதும் ஒரே கொள்கையுடைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற திமுக தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications