கூட்டணியில் குண்டு.. கல்லை விட்டெறிந்த காங்கிரஸ் ‘கை’கள்! ஒரே பேச்சில் முடித்து வைத்த மு.க.ஸ்டாலின்!
சென்னை: தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைய போவதாக கடந்த சில தினங்களாகவே பேசப்பட்டு வந்தது. மேலும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகைக்கும் மூத்த அமைச்சர்களுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்தது. இந்த நிலையில் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசி இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை சகோதரர் என குறிப்பிட்டதோடு, எதிர்காலத்திலும் காங்கிரஸும் திமுகவும் இணைந்து பயணிக்கும் எனக் கூறியிருக்கிறார். இதன் மூலம் தவெக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் திமுகவினர்.
தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துமோ? இல்லையோ? தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் கூட்டணி கட்சிகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என சொல்லப்படுகிறது. விஜயுடன் கூட்டணி சேர்கிறார்களோ இல்லையோ, சேர்ந்து விடுவோம் என கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளிடம் பேரம் பேச தொடங்கி இருக்கின்றன அரசியல் கட்சிகள்.
அந்த வகையில் காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அதிமுக - திமுகவிடம் கூடுதல் சீட்டுகள் வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என பேசி வருகின்றன. உச்சபட்சமாக விஜயுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் இரு பிரிவுகள் உருவாகி இருக்கிறது.

திமுக காங்கிரஸ் கூட்டணி
திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்பதுதான் தற்போதைய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான செல்வப் பெருந்தகையின் எண்ணம். அதே நேரத்தில் செல்வ பெருந்தகைக்கு எதிராக செயல்பட்டு வரும் முன்னாள் காங்கிரஸ் தலைவர்களான கேஎஸ் அழகிரி, தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்ட சில தலைவர்கள் மாற்றுக் கூட்டணி என்ற பேச்சை முன்னெடுத்து வருகின்றனர். திமுகவிடம் கூடுதல் சீட்டுகள் வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்டால் திமுக தலையசைக்காது என்பதால் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி, துணை முதல்வர் வேட்பாளர் என தங்கள் பங்குக்கு அடித்து விட்டு வருகின்றனர்.
தவெக கூட்டணி பேச்சு
மேலும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக திமுகவிடம் இது தொடர்பாக பேசி வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏரி நீர் திறப்பு தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகைக்கும் திமுக முன்னாள் அமைச்சரான துரைமுருகனுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்தது. தன்னை மதிப்பதே இல்லை என பொதுவெளியில் போட்டு உடைத்தார் செல்வபெருந்தகை. இதனால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படலாம் என சொல்லப்பட்டது.
திமுக காங்கிரஸ் உறவு
இதற்கு முன் இதே போல பல சம்பவங்கள் நடைபெற்று இருந்தாலும், திமுக கூட்டணி உடைபடும் அளவுக்கு இது செல்லாது என்றனர் திமுகவினர். இந்த நிலையில் கூட்டணி முறிவு குறித்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசி இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின். சென்னையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகி சொக்கர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர் இதுவரை நான் யாரையும் சகோதரர் என அழைத்ததில்லை, ராகுல் காந்தியை மட்டும் தான் அழைத்திருக்கிறேன். அவரும் என்னை பார்க்கும் போதெல்லாம் பிரதர் என்றுதான் அழைப்பார் என கூறி இருந்தார்.
திமுக கூட்டணி உறுதி
மேலும், ராகுலுக்கு எனக்கும் நல்ல இணக்கமான சூழல் நிலவுகிறது. தேர்தல் ஆணையம், மத்திய விசாரணை அமைப்புகள் என பல்வேறு வகைகளில் மாநில அரசுகளை முடக்க பாஜக நினைக்கிறது. ஆனால் திமுக காங்கிரஸ் அதனை செய்ய விடாது. எதிர்காலத்தில் நாட்டின் நலனைக் காக்க காங்கிரசும் திமுகவும் ஒன்றாக பயணிக்கும் எனக் கூறியிருக்கிறார். இதன் மூலம் 2026 தேர்தல் மட்டுமல்ல வரும் காலங்களிலும் காங்கிரஸ் திமுக கூட்டணி தொடரும் என்பதே ஸ்டாலினின் பேச்சின் சாராம்சம் என்கின்றனர் திமுகவினர்.












Click it and Unblock the Notifications