மு.க ஸ்டாலின் முதல்வராக போடப்போகும் முதல் கையெழுத்து எதற்குத் தெரியுமா இல்லத்தரசிகளே
மு.க ஸ்டாலின் முதல்வரான உடன் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், அல்லது அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி திட்டத்திற்கு கையெழுத்திடவே அதிகம் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறது.
சென்னை: தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் இல்லத்தரசிகள், பெண்களை மகிழ்விக்கும் திட்டங்களுக்கு முதல் கையெழுத்திடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 7 திட்டங்களுக்கு முதல் நாளில் கையெழுத்து போடப்போவதாகவும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கு முதல் கையெழுத்தை போடுவார் என்றும் அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தின் 16 வது சட்டசபைக்கான தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்றுள்ளது. 125 இடங்களில் திமுக மட்டும் தனித்து வென்றுள்ளது. இதன் மூலம் திமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கப் போகிறது. அண்ணா வழியில், கருணாநிதி வழியில் நின்று சிறப்பான ஆட்சியைத் தரப்போவதாக மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க ஸ்டாலின், தமிழகத்தின் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகியவற்றை மேம்படுத்த ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற தலைப்பில் தொலைநோக்கு திட்டத்தை ஸ்டாலின் வெளியிட்டார். ஸ்டாலின் 7 உறுதி மொழிகள் என்றும் அதற்கு பெயர் சூட்டினார்.
யோகி ஆளும் உ.பி.யில்.. ஆம்புலன்சில் அதிக பணம் கேட்டதால்.. கணவரின் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற பெண்
வாக்குறுதிகள் என்னென்ன
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, ரேஷன் கடைகளில் ஜூன் மூன்றாம் தேதி 4000 ரூபாய் உதவித்தொகை, காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைப்பு, எரிபொருள் விலை ஐந்து ரூபாய் வரை குறைப்பு, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி என்று ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்திருந்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்
வெள்ளிக்கிழமை 7ம் தேதி முதல்வராக பொறுப்பேற்க இருப்பதால், அதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறைக்கு சென்று பணிகளை துவங்கும் ஸ்டாலின், எந்த திட்டத்தில் முதல் கையெழுத்திட போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
7 திட்டங்களுக்கு கையெழுத்து
முதல்நாளில் முதல்வராக மு.க ஸ்டாலின் 7 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்து போடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் முக்கியமாக குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், அல்லது அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி திட்டத்திற்கு கையெழுத்து போடப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உங்கள் தோழன்
ஸ்டாலின் தனது பிரசார பயணத்தின் போது மிகவும் நம்பிக்கையாக அடுத்தது நம்முடைய ஆட்சிதான் என்று சொல்லி வாக்கு கேட்டார். எல்லா எண்ணங்களும் ஓர் அடிப்படையான லட்சியத்தையே சுற்றி வட்டமிடுகின்றன. மக்களுக்கு நல்வாழ்வு தரவேண்டும் என்ற லட்சியம். லட்சியம் மிகப்பெரியது; நான் மிகச் சாமானியன். ஆனால் உங்கள் தோழன். ஆகவே என்னுடைய திறமையை நம்பி அல்ல, உங்கள் எல்லோருடைய திறமையையும் நம்பி இந்தப் பணியில் ஈடுபடுகிறேன் என்றார். அதேபோல் உங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்கிறேன் என்றும் கூறினார்.
நல்லாட்சியாக அமையும்
கோடிக்கணக்கான மக்களின் ஆதரவோடு நாம் அமைக்கும் ஆட்சியானது, இவற்றை நிறைவேற்றித் தரும் ஆட்சியாக அமையும் என்று கூறியுள்ள ஸ்டாலின், எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசை நடத்திக் காட்டுவோம். சட்டம் ஒழுங்கை உறுதியோடு காப்பாற்றுவோம். சட்டமீறல்களையும் குற்றச்சம்பவங்களையும் இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம். அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்போம். நூறு சதவிகிதம் வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகத்தைக் கொடுப்போம் என்ற உறுதிமொழிகளை எடுத்திருக்கிறார். இந்த உறுதிமொழிகளை நிறைவேற்றினால் 2031ஆம் ஆண்டுவரைக்கு திமுக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்பதே உண்மை.