நெருப்பாற்றில் நீச்சல்! எத்தனையோ கேலி கிண்டல்கள்! புடம் போட்ட தங்கமாக இன்று! இது தளபதி ஸ்டாலின் கதை!
சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 2-வது முறை பொறுப்பேற்றுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அரைநூற்றாண்டு கால பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான ஸ்டாலின், இன்று அரசியலில் புடம் போட்ட தங்கமாக ஜொலிக்கிறார்.
திமுகவில் வட்டப் பொறுப்பாளர் தொடங்கி தலைவர் பதவி வரை ஸ்டாலின் பயணித்த கதையை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

கட்சிக்காக நாடகம்
பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட ஸ்டாலின், திமுகவுக்காக ஊர்தோறும் நாடகங்கள் போட்டு தன்னை பிரச்சாரத்தில் ஈடுடுத்திக் கொண்டார். முரசே முழங்கு, நாளை நமதே, என அவர் நடித்த நாடகங்கள் எல்லாம் அந்தக் காலத்தில் சக்கை போடு போட்டன. இதுமட்டுமல்லாமல் சென்னை கோபாலபுரம் பகுதியில் தனது நண்பர்களை ஒருங்கிணைத்து கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை உருவாக்கி அண்ணாவையே வியக்க வைத்தவர் ஸ்டாலின்.

மாநகராட்சித் தேர்தல்
1968ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுகவுக்காக மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்த ஸ்டாலினுக்கு, கட்சியில் முதல்முறையாக தேடி வந்த பதவி 75வது வட்ட திமுக பொறுப்பாளர். இதையடுத்து வட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து 1973ஆம் ஆண்டு திமுக பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1976ஆம் ஆண்டு மிசாவில் கைது செய்யப்பட்ட ஸ்டாலின் சுமார் ஓராண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தார். மிசா சிறைவாசம் அவருக்கு இன்னும் கூடுதல் உத்வேகத்தை அரசியலில் தந்தது.

திமுக இளைஞரணி
1980ஆம் ஆண்டு மதுரை ஜான்சிராணி பூங்காவில் திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட போது அதன் அமைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். பிறகு அடுத்த மூன்றாண்டுகளில் 1983ஆம் ஆண்டு திமுக இளைஞரணிச் செயலாளராக புரோமோஷன் செய்யப்பட்டார். இதனிடையே 1984ஆம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே ஸ்டாலின் தோற்றுப்போனது அவரை கேலி கிண்டல்களுக்கு ஆளாக்கியது.

தொடர் வெற்றி
ஆனாலும் மனம் தளராமல் தொடர்ந்து கட்சிப்பணிகளில் குறிப்பாக திமுக இளைஞரணி பணிகளில் தன்னை பிசியாக வைத்துக் கொண்ட ஸ்டாலின் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது தமிழகத்தில் திமுக அமைத்த போதும் ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி தரவில்லை கருணாநிதி. 1991 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தோல்வியை தழுவிய ஸ்டாலின், 1996-ஆம் முதல் 2021-ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 25 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருகிறார்.

சென்னை மேயர்
1996ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதோடு சென்னை மாநகராட்சி தேர்தலிலும் வெற்றிபெற்று மக்களால் தேர்வு செய்யபட்ட முதல் மேயர் என்ற பெருமையை பெற்றார் ஸ்டாலின். இவர் மேயராக இருந்தக் காலத்தில் தான் சென்னையில் எண்ணற்ற மேம்பாலங்கள் கட்டப்பட்டன. மீண்டும் 2021ஆம் ஆண்டும் ஸ்டாலின் சென்னை மேயராக தேர்வான நிலையில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தை கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்தார்.

முதல்முறை அமைச்சர்
2003ஆம் ஆண்டு திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக உயர்ந்த ஸ்டாலினுக்கு, 2006ஆம் ஆண்டு முதல்முறையாக உள்ளாட்சித் துறை அமைச்சர் பொறுப்பை வழங்கினார் கருணாநிதி. அதைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு திமுக பொருளளர் பதவி, 2009 ஆம் ஆண்டு துணை முதல்வர் பதவி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்தப் பதவிகளில் கருணாநிதி எதிர்பார்த்ததை போல் பணியாற்றியதால் 2017-ல் திமுக செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

2வது முறை தலைவர்
அதைத் தொடர்ந்து கருணாநிதியின் மறைவுக்கு பிறகு 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திமுகவின் தலைவராக முதல்முறையாக ஸ்டாலின் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடி வருகின்றன. இதனிடையே இன்று மீண்டும் 2-வது முறையாக திமுக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஸ்டாலின்.

கேலி கிண்டல்கள்
அரசியல் பொதுவாழ்வில் ஸ்டாலின் சந்தித்த ஏற்ற இறங்கங்கள் பல, கேலி கிண்டல்கள் பல, வசவுகள் பல.. ஆனால் நொடிப்பொழுதும் அதற்கெல்லாம் அயர்ந்துவிடாமல், அவைகளை எல்லாம் உரமாக்கிக்கொண்டு நெருப்பாற்றில் நீந்தி அரசியலில் புடம் போட்ட தங்கமாக மின்னுகிறார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications