ஓபிஎஸ்.. பிரேமலதா.. ஒரே நாளில் அடுத்தடுத்து சந்தித்த ஸ்டாலின்.. தமிழக அரசியலை ஸ்டன்னாகிய திமுக மூவ்
சென்னை: தமிழ்நாடு அரசியலை ஸ்டன் ஆக்கும் விதமாக இரண்டு முக்கியமான நடவடிக்கைகளை இன்று ஒரே நாளில் திமுக மேற்கொண்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு உள்ள இரண்டு சந்திப்புகள் தமிழக அரசியலை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சென்னையில் உள்ள அடையார் பூங்காவில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

மு.க. ஸ்டாலின் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு: எதிர்பாராத நிகழ்வு
முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அவர் இன்று தனது பணிகளைத் தொடங்கும் வகையில் தலைமைச் செயலகம் செல்ல இருந்தார். மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு, அவர் தலைமைச் செயலகம் செல்வது இதுவே முதல் முறையாகும்.
உடலநலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின், தற்போது உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து முதல்முறையாக மீண்டும் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அதே சமயம், ஓ. பன்னீர்செல்வமும் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். இருவரும் ஒரே நேரத்தில் பூங்காவில் இருந்தபோது சந்தித்துக்கொண்டனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கமாக உடற்பயிற்சிக்காக இன்று காலை அடையார் பூங்காவுக்குச் சென்றார். அப்போது, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் அங்கு நடைப்பயிற்சிக்காக வந்துள்ளார். இருவரும் சந்தித்துக்கொண்டது குறித்து பல யூகங்கள் எழுந்துள்ளன. இந்தச் சந்திப்பின்போது இரு தலைவர்களும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விதமான கருத்துகளை உருவாக்கியுள்ளது.
அதிகாரப்பூர்வமற்ற இந்த சந்திப்பு அரசியல் களத்தில் பல யூகங்களை கிளப்பியுள்ளது. ஏற்கனவே என்டிஏ கூட்டணி தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் சந்திப்பு - ஓ பன்னீர்செல்வம் பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பிரதமரைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பல வகையான யூகங்கள் கிளம்பின.
ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என்றும் பேசப்பட்டது. இது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தனது நிலைப்பாடு குறித்து நிர்வாகிகளுடன் ஓ. பன்னீர்செல்வம் விவாதிக்க உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்தது பல விவாதங்களுக்கு வழி வகுத்துள்ளது.
பிரேமலதா - ஸ்டாலின் சந்திப்பு
சென்னை தலைமைச் செயலகத்திற்கு இன்று காலை செல்வதற்கு முன்பு, முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இல்லத்திற்கு வருகை தந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில், பிரேமலதா விஜயகாந்த் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

மேலும், சமீபத்தில் மறைந்த தி.மு.க.வின் மூத்த தலைவர் மு.க. முத்துவின் மறைவுக்கும் முதல்வர் ஸ்டாலினிடம் பிரேமலதா விஜயகாந்த் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோரும் உடனிருந்தனர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்த கூட்டணி அமைப்பது குறித்து தேமுதிக இதுவரை எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தேமுதிக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. வரும் ஜனவரி மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் கூட்டணி குறித்தான முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தது இருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஸ்டாலின் - பிரேமலதா சந்திப்பு கவனம் பெற்றுள்ளது. இப்படி ஒரே நாளில் ஓ பன்னீர்செல்வம், பிரேமலதா என்று என்டிஏ கூட்டணிக்கு நெருக்கமான இருவரை ஸ்டாலின் சந்தித்தது கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications