கருணாநிதிக்கு முரசொலி மாறன் போல.. ஸ்டாலினின் மனசாட்சியாக மாறுகிறாரா சபரீசன்?
மருமகன் சபரீசனுக்கு டெல்லி பொறுப்பை வழங்குகிறதா திமுக?
Recommended Video
சென்னை: கருணாநிதிக்கு முரசொலி மாறன் போல.. ஸ்டாலினின் மனசாட்சியாக மாறுகிறாரா சபரீசன் என்ற கேள்வியும், அப்படின்னா எல்லாரும் சொல்றதும் உண்மைதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கருணாநிதி உயிருடன் இருந்தபோதே, அழகிரியும், ஸ்டாலினும் கட்சிக்குள் நுழைந்ததற்கு, வாரிசு அரசியல் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்தியாவிலேயே வாரிசுகள் அதிகமாக உள்ள கட்சி திமுகதான் என்று பெயர் எப்போதோ கிடைத்து விட்டது. ஆனாலும் அழகிரி, ஸ்டாலின் இருவருமே தனித்தனியாக களப்பணியில் ஈடுபட்டார்கள். கட்சிக்காக உழைத்தார்கள். திமுக வளர்ச்சியில் இவர்களின் பங்கு இல்லையென சொல்லி விட முடியாது.
ஒதுக்கப்பட்ட கனிமொழி?
இன்றைக்கு ஸ்டாலின் தலைமை பொறுப்புக்கு வந்து இதே வாரிசு அரசியலை முன்னெடுப்பது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. ஏற்கனவே கனிமொழியை ஒதுக்கியுள்ளார், அவரை முன்னிலைப்படுத்துவதில்லை என்ற சர்ச்சை எழுந்து திமுக தொண்டர்களை அதிருப்தியில் ஆழ்த்தி வருகிறது.
மாப்பிள்ளை சபரீசன்
ஸ்டாலினோ ஒரு பக்கம் உதயநிதியையும் மறு பக்கம் மாப்பிள்ளை சபரீசனையும் களமிறக்குவது மேலும் அதிர்ச்சியைதான் ஏற்படுத்தி உள்ளது. சோனியா காந்தியை சந்திக்க செல்லும்போது சபரீசனையும் அழைத்து கொண்டு போய் உள்ளார் ஸ்டாலின். டெல்லி என்றாலே அரசியல் விவகாரம் என்றால் டி.ஆர். பாலுவும், கனிமொழியும் பார்த்து கொள்வார்கள்.
மறைமுக அரசியல் பங்கு
அவர்களிடம்தான் கருணாநிதி பொறுப்பை தந்தார். இல்லையென்றால், தயாநிதி மாறனும், கனிமொழியும் கவனித்து கொள்வார்கள். இப்போது தயாநிதி மாறன் இடத்தில் சபரீசனா என்று ஷாக்காகி உள்ளனர் தொண்டர்கள். எதற்காக சபரீசனை சோனியாவிடமும், ராகுலிடம் அறிமுகம் செய்து வைக்க வேண்டும்? ஸ்டாலினின் அரசியல் பணியில் சபரீசனின் பங்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது.
ஐடியா தந்தவர்
நமக்கு நாமே சுற்றுப் பயணத்தின்போது, ஸ்டாலினின் கலர் கலர் டீ-சர்ட், சைக்கிள் பயணம், டீ கடையில் டீ குடித்தது, பஸ்களில் சென்று கொண்டிருந்தவர்களிடம் செல்பி என இதற்கெல்லாம் ஐடியா கொடுத்தது சபரீசன்தான் என்று அப்போது சொல்லப்பட்டது. இப்படி மறைமுக அரசியல் பணியில் அவர் இருந்து வந்தார். கடந்த மக்களவை தேர்தலின்போதும், சட்டசபை தேர்தலின்போதும் இவரது பங்கினை பார்த்து ஸ்டாலினே ஆடிப்போய் விட்டார்.
கருணாநிதி மனசாட்சி
கருணாநிதிக்கு மனசாட்சியாக அவரது மருமகன் முரசொலி மாறன் இருந்தார். அதனால்தான் அவரை டெல்லிக்கு அனுப்பினார் கருணாநிதி. இப்போது ஸ்டாலினுக்கும் அவரது மருமகன் சபரீசன்தான் மனசாட்சியாக இருந்து வருகிறார். அதனால் கருணாநிதியை போலவே இதிலும் ஸ்டாலின் நடந்து கொள்ள ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது!
டெல்லி விவகாரங்கள்
எனவே சபரீசனுக்கு அரசியல் ஒன்றும் புதிதல்ல என்றாலும், இதுவரை அவர் மறைமுகமாகவே அரசியல் பணி செய்து வந்தார். ஆனால் இப்படி திடுதிப்பென்று டெல்லிக்கு கூட்டிட்டு போவார், சோனியா, ராகுலிடம் அறிமுகப்படுத்துவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அப்படியென்றால் டெல்லி விவகாரங்களை இனி சபரீசன்தான் கவனித்து கொள்வாரா? என தெரியவில்லை.
பின்னடைவு
எப்படி பார்த்தாலும், இப்போது கனிமொழி, தயாநிதியை ஒதுக்கிய நிலையில், கூட்டணி குழப்பம் தலைவிரித்தாடும் நிலையில், மாப்பிள்ளையை நேரடியாகவே களமிறக்கி இருப்பது ஸ்டாலினுக்கு பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்.