பொள்ளாச்சி விவகாரத்தில் ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை?.. முதல்வர், துணை முதல்வருக்கு ஸ்டாலின் சுளீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மனசாட்சியையும் உலுக்கி எடுத்திருக்கும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடூர நிகழ்வு குறித்து, அ.தி.மு.க. ஆட்சி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தொடர்ந்து திசை திருப்பும் போலியான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது. மனித உருவில் அலைந்து திரியும் விலங்கு குணம் கொண்ட, கடைந்தெடுத்த கயவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் எனப் பொதுமக்களும் மாணவர்களும் பெண்களும் தீர்மானத்துடன் களமிறங்கி விட்டதைத் தமிழ்நாட்டில் பரவலாகக் காண முடிகிறது. இந்தக் கொடூரம் குறித்து இதுவரை இந்த மாநிலத்தை ஆளுகிற முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ வாய் திறக்கவேயில்லை என்பது வேதனையானது, வெட்கக்கேடானது!

குரல்வளையை நெரிக்கும்

குரல்வளையை நெரிக்கும்

அவர்கள் இருவரும் வாய் திறக்க மறுப்பது மட்டுமின்றி, நியாயம் கேட்டு குரல் எழுப்புவோரின் குரல்வளையை நெரிக்கும் வகையில், போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதும், போராடுபவர்கள் மீது காவல்துறையைப் பயன்படுத்தி வன்முறையை ஏவுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த நடவடிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.

வேகம்

வேகம்

பொள்ளாச்சி கொடூரம் குறித்து பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் வெளியிட்ட செய்திகளைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற தலைவர்களும் கண்டனம் தெரிவித்த பிறகே, அ.தி.மு.க. அரசு லேசாக அசைந்தது என்பதே உண்மை நிலை. அப்போதும்கூட உண்மைகள் முழுமையாக வெளிவந்துவிடக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் மீது பழிபோடும் நோக்கில்தான் துணைச் சபாநாயகர் உள்ளிட்டவர்கள் செயல்படுகிறார்களே ஒழிய, இந்தக் கொடூரத்தில் தொடர்புடைய ஆளுந்தரப்பின் கரங்களில் படிந்துள்ள அழிக்க முடியாத கறைகளைக் கழுவும் முயற்சியே ரகசியமாக வேகமாக நடைபெறுகிறது.

பாயந்தது குண்டர் சட்டம்

பாயந்தது குண்டர் சட்டம்

கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்வதாக அறிவித்த சில மணி நேரத்தில், சி.பி.சி.ஐ.டிக்கு விசாரணை மாற்றப்படுவதாக அறிவிப்பதும், அதன்பின் சில மணிநேரங்களிலேயே சி.பி.ஐ.க்குப் பரிந்துரை என்பதிலிருந்தே ஆட்சியாளர்களின் பதற்றமும் பயமும் அம்பலமாகிவிட்டது. கொடுமையான பாலியல் குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டத்தைப் பாய்ச்சாமல், ஒரே ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துவிட்டு, அவர்கள் மீது குண்டர் சட்டம் போடுவது என்பது சட்டரீதியாகவே அவர்கள் சில மாதங்கள் கழித்துத் தப்பிப்பதற்கான வழியை அரசே உருவாக்கித் தருகிறதோ என்ற சந்தேகத்தை அனைத்துத் தரப்பிலும் ஏற்படுத்துகிறது.

முழுமையான விசாரணை

முழுமையான விசாரணை

பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரம் என்பது, கையில் சிக்கிய 4 இளைஞர்களை மட்டும் பலிகடாவாக்கும் நிகழ்வாக மாறிவிடக்கூடாது. பொள்ளாச்சி பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக பாலியல் வன்கொடூர நிகழ்வு நடந்து வருவதும், அண்மைக்காலத்தில் ஆறேழு இளம்பெண்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதும் உரிய முறையில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, முழுமையாக விசாரிக்கப்பட வேண்டிய சமூக விரோத நிகழ்வுகாளாகும்.

மாலையில் ஒரு விசாரணை

மாலையில் ஒரு விசாரணை

காலையில் ஒரு வகை விசாரணை, மாலையில் ஒரு வகை விசாரணை எனத் தள்ளாடுவது அனைத்துமே சதி எண்ணத்தோடு நடத்தப்படும் கண்துடைப்பு நாடகங்கள். இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆளுந்தரப்பினரைக் காப்பாற்ற நினைக்கும் முயற்சியில் மட்டுமே ஆட்சியாளர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால், அரசியல் கட்சியினரைக் கடந்து, இது தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்களின் உணர்வுக் கொந்தளிப்பாக மாறிவிட்டது. இனியும் மறைக்க முயற்சித்தாலோ, குற்றவாளிகளைக் காப்பாற்ற நினைத்தாலோ தமிழ்நாடு என்பது மக்களின் தன்னெழுச்சிமிக்க போராட்டக்களமாக மாறிவிடும்.

மனசாட்சிக்கு

மனசாட்சிக்கு

அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் இதனை உணர்ந்து, உடனடியாக Speedy Trial எனப்படும் விரைவு நீதிமன்ற விசாரணைக்கு இந்த வழக்கை உட்படுத்தி, பாலியல் வன்கொடூர நிகழ்வில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதிப்பதும், தப்பிக்க விட நினைப்பதும் மக்களின் மனசாட்சிக்கு விரோதமானது; அது ஆட்சியாளர்களைக் கனவிலும் நனவிலும் துரத்திக் கொண்டே இருக்கும்! என தனது அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+