மோடிக்கு சேவகம் செய்ய பாரம்பரியமான பொங்கல் பண்டிகை தேதியை மாற்றிவிடாதீர்கள்.. ஸ்டாலின்
சென்னை: மோடிக்கு சேவகம் செய்ய பாரம்பரியமான பொங்கல் பண்டிகை தேதியை மாற்றிவிடாதீர்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எக்ஸாம் வாரியர்ஸ் என்ற புத்தகம் எழுதிய பிரதமர் நரேந்திர மோடி அதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான 17-ஆம் தேதி பேசுவதாக இருந்தார்.
அச்சமயம் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டியது கட்டாயம் என்றும் திருவள்ளுவர் தினத்துக்கான விடுமுறை ரத்து என்றும் சொல்லப்பட்டது.
தமிழக சட்டசபையில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏக்கள் மனு
ஸ்டாலின் அறிக்கை
இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறையை ரத்து செய்துவிட்டு மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தால் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.
தெளிவு
இதையடுத்து 17-ஆம் தேதி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயமல்ல. வீட்டில் டிவி இருக்கும் மாணவர்கள் வீட்டிலேயே மோடி உரையை கேட்டுக் கொள்ளலாம். வீட்டில் டிவி இல்லாத மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பப்பட்டால் பள்ளிக்கு வந்து தொலைகாட்சியில் அவரது உரையை கேட்கலாம் என முதல்வரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் தெளிவுப்படுத்திவிட்டனர்.
பொங்கல் பண்டிகை
இந்த நிலையில் மோடி மாணவர்களிடையே உரையாற்றும் நிகழ்ச்சி வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'பிரதமர் பேசப்போகிறார்' என்று தமிழர் திருநாளாம் மாட்டுப் பொங்கல் நாளன்று பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்து, மத்திய பாஜக அரசிடம் தொடர்ந்து குளிர்காய நினைத்த, அதிகார அநியாயத்தைக் கண்டித்துப் போராட்டம் அறிவித்தேன்.
சேவகம்
உடனடியாகப் பூசிமெழுகும் காரணம் சொன்னது எடப்பாடி அரசு. இதோ 20ஆம் தேதி மாணவர்களுக்காகப் பேசப் போகிறாராம் பிரதமர்! அவருக்குச் சேவகம் செய்து மகிழ்விப்பதற்காக, தொன்மையான பொங்கல் திருநாள் தேதியை மாற்றிவிடாதீர்கள் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழர் பண்பாட்டு விழாவை, உங்கள் பதவி ஆசையைத் தீர்க்கும் பாதம் தாங்கும் விழாவாக மாற்றிவிட வேண்டாம்! என தெரிவித்தார்.