தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம்... முதலீடுகள் ஈர்த்தது பற்றி வெள்ளை அறிக்கை தேவை -மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வேலைவாய்ப்பு உருவாக்கம், முதலீடுகள் ஈர்த்தது பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், வெற்று அறிவிப்புகள் - வீண் விளம்பரங்களை மட்டுமே முன்னிறுத்தி தமிழகத்தின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியை படுபாதாளத்தில் வீழ்த்தியிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
வேலையின்மை
தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 49.8 சதவீதமாக அதிகரித்து - தேசிய சராசரியான 23.5 சதவீதத்தை விட இரட்டிப்பாகி வரலாறு காணாத வகையில் வானுயரப் பறந்து கொண்டிருக்கிறது என்பது பேரதிர்ச்சியளிக்கிறது. கடந்த டிசம்பர் 2019-லிருந்த வேலைவாய்ப்பின்மை, தற்போது 10 மடங்காக உயர்ந்து, இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைத்து - நம்பிக்கையை நாசம் செய்து விட்டது.
வீண் விளம்பரம்
'வெற்று அறிவிப்புகள்' 'வீண் விளம்பரங்கள்' 'கமிஷனுக்கு விடப்பட்ட டெண்டர் பற்றி மாவட்ட அளவில் ஆய்வுகள்' போன்றவற்றை மட்டுமே முன்னிறுத்தி - தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும், தொழில் வளர்ச்சியையும் படுபாதாளத்தில் வீழ்த்தியிருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமியின் தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி, ஒரு தலைமுறை இளைஞர்களுக்கு ஏமாற்றத்தையும் - மாபெரும் துரோகத்தையும் செய்திருக்கிறது.
காரணம் புரியாமல்
எவ்வித ஒழுங்குமுறையும் இல்லாமல் - அறிவியல் ரீதியான காரணங்களும் புரியாமல், கொரோனா பேரிடர் ஊரடங்கைத் தொடர்ந்து நீட்டித்து வருகிறது அ.தி.மு.க. அரசு. டாஸ்மாக் கடைகளைத் திறந்து விட்டு - பிழைப்பு தேடி வேலைக்குச் செல்வோரைத் தடுத்து, அவர்களைத் தடுமாறச் செய்து வருகிறது. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் சென்ற மாதமே அறிவுறுத்தியும், இ-பாஸ் நடைமுறையை இன்றுவரை, பல வகையான 'முறைகேடுகளுடன்' செயல்படுத்தி - மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தையும் தடை செய்து, மக்களை முடக்கிப் போட்டு விட்டது அ.தி.மு.க. அரசு.
ஸ்டாலின் வலியுறுத்தல்
"முதலீடுகளை ஈர்த்து விட்டோம்", "புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டு விட்டோம்" என்று புழுத்துப்போன பொய்களைத் தினமும் கட்டவிழ்த்து விட்டுக் காலத்தைக் கழித்து வருகிறார்கள், அ.தி.மு.க. அமைச்சர்களும் - முதலமைச்சரும்! உலக முதலீட்டாளர் மாநாடுகள், வெளிநாடு சுற்றுலா மற்றும் கொரோனா காலத்தில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன, எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறித்து, தமிழக மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும்; கேட்டுக் கொள்கிறேன்.