ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸுக்கு நொச்சிக்குப்பத்திற்கு காரில் லிப்ட் கொடுத்த எம்எல்ஏ.. மெரினாவில் பரபரப்பு
சென்னை: சென்னை பட்டினம்பாக்கத்தில் கார் விபத்தில் சிக்கி கூட்டுறவுத் துறை தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனின் கார் சேதமடைந்த நிலையில் அவருக்கு எம்எல்ஏ ஒருவர் லிப்ட் கொடுத்து அழைத்து சென்றார்.
18ஆவது ஆண்டு சுனாமி நினைவுதினத்தையொட்டி, சென்னை பட்டினம்பாக்கத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக கூட்டுறவுத் துறை தலைமைச் செயலாளர் ஜெ . ராதாகிருஷ்ணன் தனது காரில் நேற்று வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மேல்மருவத்தூரில் இருந்து வந்த சுற்றுலா வேன் ஒன்று ராதாகிருஷ்ணன் பயணித்த கார் மீது வேகமாக மோதியது. இதில் அவரது காரின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்தது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
விபத்தில் சிக்கிய ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கார்.. சென்னையில் பரபரப்பு.. போக்குவரத்தை அவரே சரி செய்தார்
போக்குவரத்து பாதிப்பு
ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் 200 மீட்டர் தொலைவில் மெரினா காவல் நிலையம் இருந்தும் கூட அங்கிருந்து போலீஸார் யாரும் வரவில்லை. இதனால் ராதாகிருஷ்ணனே போக்குவரத்தை சரி செய்து வாகனங்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைத்தார்.
மெரினா காவல் நிலைய போலீஸ்
பின்னர் தகவலறிந்த மெரினா காவல் நிலைய போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தி அந்த சுற்றுலா வாகனம் மீது வழக்குப் பதிவு செய்தனர். சுற்றுலா வாகனம் வேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது விபத்து நடைபெற்ற இடத்திற்கு எம்எல்ஏ மயிலை வேலு வந்திருந்தார்.
எம்எல்ஏ மயிலை வேலு
பின்னர் அவர் தனது வாகனத்தில் வருமாறு அழைத்தார். இதையடுத்து அந்த வாகனத்தில் ஏறிய ஜெ.ராதாகிருஷ்ணன் நொச்சிக்குப்பத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். கூட்டுறவுத் துறை தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணனின் கார் விபத்துக்குள்ளானது பட்டினம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கார் விபத்தால் பரபரப்பு
ராதாகிருஷ்ணனின் கார் விபத்துக்குள்ளானது என தெரிந்ததும் அந்த பகுதியில் இருந்த மக்கள் ஓடி வந்து அவரிடம் நலம் விசாரித்தனர். அது போல் நொச்சிக்குப்பத்தில் அஞ்சலி செலுத்திய போதும் ராதாகிருஷ்ணனின் கார் விபத்துக்குள்ளானதை அறிந்த மக்கள் அவருக்கு என்னவாயிற்று என கேட்டு அன்பாக உபசரித்தனர். போக்குவரத்து காவலர்கள் வரும் வரை காத்திருக்காமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட கூடாது என்பதற்காக போக்குவரத்தை தானே சரி செய்த சம்பவத்திற்காக ராதாகிருஷ்ணனை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.