அமைச்சர்களே சொன்ன சொல்ல காப்பாத்தலே..!.. தாய்க்கிழவிகளின் கோபத்துக்கு ஆளாவீர்- டிஆர்பி ராஜா வார்னிங்
சென்னை: அருமை அமைச்சர்களே மன்னார்குடி தொகுதிக்கு சொன்ன வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றாமல் போய்விட்டால் என் அன்புக்குரிய தாய்க்கிழவிகளின் கோபத்துக்கு ஆளாவீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என டிஆர்பி ராஜா ஜாலியாக ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
தமிழகத்தில் ஸ்டாலினின் அமைச்சரவையை அலங்கரிக்க போகும் அமைச்சர்களின் பட்டியல்கள் நேற்றைய தினம் வெளியானது. அன்பில் மகேஷ், டிஆர்பி ராஜா, உதயநிதி, டாக்டர் எழிலன் உள்ளிட்டோருக்கு இளைஞரணியில் அவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிகாரப்பூர்வ அமைச்சரவை பட்டியலில் அன்பில் மகேஷுக்கு மட்டும் பள்ளிக் கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வந்த நாளான மே 2 ஆம் தேதி தபால் வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே டிஆர்பி ராஜா அமைச்சர் என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
வெற்றி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டசபை தொகுதி எம்எல்ஏவான டிஆர்பி ராஜா கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவர் மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்ததாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இந்த 2021 தேர்தலிலும் இவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் வென்று அமைச்சரவைக்கு செல்வார் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
|
ட்விட்டரில்
இந்த நிலையில் தகவல் தொழில்நுட்ப அணி மன்னார்குடி சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் இந்திரஜித், டிஆர்பி ராஜாவை டேக் செய்து ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில் ராஜாக்கள் மந்திரி ஆவதில்லை!! என்றுமே ராஜா!!! ராஜா தான் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு டிஆர்பி ராஜா தனது ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.
அதானே
அவர் ட்வீட்டில், ஹாஹாஹா, அதானே எனக்கு பதவி இறக்கம் என்பது கிடையாது. எனது மன்னார்குடி தொகுதி மக்களின் மனங்களில் இருக்கவே நான் விரும்புகிறேன். ஆனால் அன்புக்குரிய அமைச்சர்களே மன்னார்குடி தொகுதிக்கு செய்வதாக கூறியிருந்த தேர்தல் வாக்குறுதிகளில் சிறியதை கூட செய்யாமல் விட்டாலோ அல்லது காலம் தாழ்த்தினாலோ எங்கள் தொகுதியின் தாய்க் கிழவிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என ஜாலியாக ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
டெல்டா
அந்த ட்வீட்டில் ஏதோ போராட்டத்தில் கலந்து கொண்ட வயதான பெண்களுடன் ராஜா அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ராஜா போட்ட ட்வீட்டில் பலர் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லையே என ஆதங்கப்பட்டிருக்கிறார்கள். டெல்டா மாவட்டத்தை எப்போதும் கருணாநிதி விட மாட்டார், ஆனால் தளபதி கைவிட்டுட்டாரே என நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு ஒரு வலைஞர், அட நம்ம முதல்வரே டெல்டா மாவட்டம்தான்ப்பா (முதல்வர் ஸ்டாலினின் தந்தை கருணாநிதியின் சொந்த ஊர் திருக்குவளை- திருவாரூர் மாவட்டம்) என்கிறார்.