Exclusive: 2 நாளுக்கு முன்பு... 'அந்த' ஃபோன் கால்.. 10 கோடிக்கு பேரம் - மநீம சினேகன் 'ஷாக்' தகவல்
சென்னை: விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடாமல் இருக்க, என்னிடம் ரூ.10 கோடிக்கு பேரம் பேசினார்கள் என்று மநீம வேட்பாளர் சினேகன் தடாலடியாக தெரிவித்துள்ளார்
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி முதன்முதலாக சந்திக்கிறது.
சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைதியுள்ள மக்கள் நீதி மய்யம் மொத்தம் 154 இடங்களில் தனித்து போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.

மாற்றம் உறுதி
அந்த வகையில், மநீம சார்பில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கவிஞர் சினேகன், இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நமது ஒன் இந்தியா தளம் சார்பில் அவரிடம் நாம் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது பேசிய சினேகன், 'மக்கள் மாற்றத்தை காண ஆவலோடு உள்ளனர். மக்கள் நீதி மய்யமும் திமுக, அதிமுகவுக்கு மாற்றான கட்சி என்ற பிரச்சாரத்தோடு களமிறங்கியுள்ளது. எங்களால் கண்டிப்பாக மாற்றத்தை கொண்டு வர முடியும்.

பின்வாங்க சொன்னார்கள்
விருகம்பாக்கம் தொகுதியில், என்னுடைய வெற்றிவாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. அதை நான் கண்கூடாக பார்க்கிறேன். எதனால் இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்கிறேன் என்றால், விருகம்பாக்கம் தொகுதியில் நான் போட்டியிடாமல் பின்வாங்கினால் எனக்கு ரூ.10 கோடி கொடுப்பதாக பேரம் பேசினார்கள்.

முக்கியமான நபர்
இரண்டு நாட்களுக்கு முன்பு, நான் எனது வேட்பு மனுத் தாக்கல் தயாரிப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தேன். அப்போது, எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒரு மிக முக்கியமான நபர், "விருகம்பாக்கம் தொகுதியில் நீங்கள் போட்டியிடாமல் இருந்தால், நாங்கள் 10 கோடி ரூபாய் வரை கொடுக்க தயாராக இருக்கிறோம்" என்றார். அவர் அப்படி சொன்ன அடுத்த நொடியே நான் அதை மறுத்துவிட்டேன்.

வெற்றி உறுதி
நான் போட்டியிட்டால் நிச்சயம் வாக்குகள் சிதறும் என்பது அவர்களுக்கு தெரியும். தவிர, திமுகவில் இங்கு உட்கட்சி பூசல் இருக்கிறது. எங்கள் தலைவர் கமல்ஹாசன் ஒரு மாற்று சக்தியாக இருப்பார் என்பதை தொகுதி மக்கள் நன்கு உணர்ந்து வைத்திருக்கிறார்கள். எனவே, என்னுடைய வெற்றி பிரகாசமாக உள்ளதால் தான் என்னிடம் பேரம் பேச தொடர்பு கொண்டார்கள்.

பேரம் பேசியது யார்?
ஆனால், எந்த கட்சி சார்பில் என்னிடம் பேரம் பேசினார்கள் என்பதை சொன்னால் கண்ணியமாக இருக்காது. அதனால் நான் அதை சொல்ல விரும்பவில்லை. என்னிடம் மட்டுமல்ல, தமிழகத்தில் பல முக்கிய தொகுதிகளிலும் மநீம வேட்பாளர்களிடம் பேரம் நடந்திருக்க வாய்ப்புண்டு என்றே நான் கருதுகிறேன்" என சினேகன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications