கமலும், சீமானும் கை கோர்த்தால் அது பெரிய அதிரடியாக இருக்கும்.. நடக்குமா?
சீமான் கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: வரும் தேர்தலில் கமலும், சீமானும் ஒன்று சேர்ந்து போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா? அப்படியே போட்டியிட்டாலும் அதன் விளைவுகள் என்ன மாதிரியாக இருக்கும்?
ஆரம்பத்தில் இருந்தே ரஜினி அரசியலுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் ஆர்வமாக இருப்பவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். இதற்கு தமிழ் இனவாத உணர்வு காரணமா அல்லது வேறு காரணத்திற்காக சீமான் கொதித்து போகிறாரா என தெரியவில்லை.
ஆனால் கமல் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று அறிவித்தபோது அமைதியாக அதை ஏற்றார் சீமான். இன்னும் சொல்லப்போனால், மக்கள் நீதி மய்யம் ஆரம்பிப்பதற்கு முன்பு, குறிப்பிட்ட சில தலைவர்களை சந்தித்து பேசி வந்தபோது, சீமான் நேரடியாக சென்று கமலை ஆழ்வார்பேட்டையில் சந்தித்து பேசினார்.
கொள்கை வேறுபாடு
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல் "சீமானுக்கு என்னைத் தெரியும், எனது சினிமாவைத் தெரியும். ஆனால், எனது கொள்கை பற்றித் தெரியாது" என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது ஒரு வருடம் முடிந்து 2-ம் ஆண்டில் மய்யம் பயணிக்கிறது. கமல் தனித்து போட்டியிட முடிவு செய்து, நல்லவர்கள் வேண்டுமானால் எங்களுடன் இணையலாம் என்றும் 3-வது அணியை அமைக்கும் முடிவையும் வெளிப்படுத்தினார். இந்த சூழ்நிலையில், சீமானும் 2 தினங்களுக்கு முன்பு ஒரு ட்வீட் போட்டிருந்தார்.
சீமான் ட்வீட்
அதில், "கூட்டணிக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்திருப்பது அவரது எதிர்பார்ப்பு, விருப்பம்! அரசியல் களத்தில் ஓராண்டு நிறைவு செய்துள்ள அவரை விட எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக களப்பணியாற்றிவரும் நாங்கள் தான் மூத்தவர்கள்!- என்றும் "ஆட்சியின் செயற்பாட்டு வரைவை வெளியிட்டு 2016 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்துள்ளோம்! நாடாளுமன்றத் தேர்தலிலும் 20 பெண்கள் 20 ஆண்கள் போட்டியிடுகிறோம்! எனவே கமல்ஹாசன் தான் எங்களுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்றும் சீமான் பதிவிட்டிருந்தார்.
மக்கள் பிரச்சனைகள்
உண்மையை சொல்லப்போனால் கமல், சீமான் இருவருமே மண்ணின் மைந்தர்கள். தமிழ் மீது பற்றுள்ளவர்கள். தமிழர்களின் உணர்வை உளப்பூர்வமான அலசி ஆராய்ந்து புரிந்து கொண்டவர்கள். சீமானின் தொண்டர்களாக இருந்தாலும் சரி, கமலின் மய்ய உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, மக்களிடையே தனித்துவம் பெற்று மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து வருபவர்கள்.
ஈகோ பிரச்சனை
இவர்கள் இருவரும் கொள்கை ரீதியாக மாறுபட்டிருக்கலாம், சீனியர், ஜுனியர் என்ற அரசியல் கால ஒப்பீடு இருக்கலாம், ஆனால் கமலும், சீமானும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் அது ஒரு வலுவான கூட்டணியாகதான் இருக்கும். சீமான் நினைத்திருந்தால் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நிறைய தேர்தல்களை சந்தித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்தது இல்லை. ஒன்று தனித்து போட்டியிடுவார், இல்லையென்றால் போட்டியிடாமல் ஒதுங்கி விடுவார்.
இணைவார்களா?
இதேதான் இன்று கமலும் முடிவெடுத்துள்ளார். தனித்துபோட்டி என்றார், பிறகு நல்லவர்கள் இணையலாம் என்றார். நிச்சயமாக கமலுடன் சீமான் இணைந்தால் அது சிறப்பாகவே இருக்கும். ஒன்றே ஒன்றுதான் இடிக்கும்.. சீமான் மட்டும் சீனியர், ஜூனியர் என்ற ஈகோவை கமலிடம் காட்டாமல், அன்று எப்படி ஆழ்வார்பேட்டை ஆபீசுக்கு முந்தி போய் வாழ்த்து சொல்லி வந்தாரோ, அதுபோல இப்போதும் கமலிடம் விரைந்து சென்றால் இரு கட்சிக்குமே நல்லதாகத்தான் இருக்கும்! செய்வாரா? இருவரும் இணைவார்களா?