முதல்வர் பெருமைபட்டு கொள்கிறார்! ஆனால்.. மாணவிகள் குப்பை அள்ளுறாங்க! மநீம கமல்ஹாசனுக்கு வந்த கோபம்!
சென்னை : கல்வித் துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக முதல்வர் பெருமைபட்டுக் கொள்கிறார். ஆனால், அரசுப் பள்ளிகளின் நிலைமைக்கு நாங்குநேரி அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகள் துப்புரவு பணியில் ஈடுபட்ட சம்பவம் ஒரு உதாரணம் என மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே அரசு மகளிர் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 475 மாணவிகள் பயின்று வருவதாக கூறப்படும் நிலையில் பள்ளியில் துப்புரவுப் பணி, ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
இதன் காரணமாக தினமும் மாணவிகள் 4 பேர் வகுப்பறைகளை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் கண்டனத்தைப் பெற்றது.
மருதநாயகம் திரைப்பட வசனங்களை நினைவு கூர்ந்து சுதந்திர வாழ்த்து கூறிய மநீம தலைவர் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம்
இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,"நெல்லை, நாங்குநேரி அரசுப் பள்ளியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட மாணவிகள்! அரசின் உத்தரவுகள் காற்றில் பறக்க விடப்படுகிறதா? @பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
துப்புரவுப் பணி
அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளே வகுப்பறைகளை கூட்டி சுத்தம் செய்து, குப்பையை அகற்றும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
மாணவிகள் புகார்
மேலும், பள்ளியில் விளையாட்டு மைதானம், ஆய்வகம், கழிப்பறை வசதி இல்லை, சுற்றிலும் செடி, புதர்கள் சூழ்ந்திருப்பதால் வகுப்புக்குள் பாம்புகள் நுழைகின்றன என்றெல்லாம் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதேபோல, தமிழகத்தில் ஏராளமான பள்ளிகளில் அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் தவிக்கின்றனர்.
முதல்வர் பெருமை
கல்வித் துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக முதல்வர் பெருமைபட்டுக் கொள்கிறார். ஆனால், அரசுப் பள்ளிகளின் நிலைமைக்கு நாங்குநேரி பள்ளி சிறு உதாரணம்தான். எனவே, பணியாளர் நியமனம் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்." என கூறப்பட்டுள்ளது.