ஓவர்.. ஓவர்.. இனி பறக்கும் படை சோதனை இல்லை.. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு!
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்ற நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க அமைக்கப்பட்ட தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு திரும்ப பெறப்பட்டுள்ளது.
ஜனநாயகத் திருவிழாவான தமிழக சட்டமன்றத் தேர்தல் அமைதியாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில், இதுவரை இல்லாத அளவாக 85.15% வாக்குகள் பதிவாகி உள்ளன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவியது.

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேர்தலில் வாக்காளர்கள் காட்டிய அதீத ஆர்வத்தால், மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 85.15%-ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 2021 தேர்தலை விடச் சுமார் 12 சதவீதம் அதிகமாகும். எனினும், வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் கடந்த தேர்தலை விட அதிகமாக வாக்களித்துள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே மிக அதிகபட்சமாக கரூர் மற்றும் வீரபாண்டி தொகுதிகள் தலா 93.40% வாக்குகளைப் பதிவு செய்து முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. அமைதியான முறையில் இவ்வளவு பெரிய வாக்குப்பதிவைச் சாத்தியமாக்கிய வாக்காளர்களுக்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கும் தேர்தல் ஆணையம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பணப்பட்டுவாடாவை தடுக்க அமைக்கப்பட்ட தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு திரும்ப பெறப்பட்டுள்ளது.
அனைத்து பூத்களிலும் பதிவான வாக்கு விபரங்களை தேர்தல் பார்வையாளர்கள் இன்று சரிபார்ப்பார்கள். இதில் குளறுபடி கண்டறியப்பட்டால் அந்த பூத்தில் மறு வாக்குப்பதிவு நடத்த பரிந்துரை செய்யப்படும். இதுவரை எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவுக்கு அவசியம் இல்லை. தமிழகத்தில் மொத்தம் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் துணை ராணுவம், போலீசார் இணைந்து 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications