தமிழ்நாடே இனிமே ஜில்லுனு தான் இருக்கும்! வானிலை மையம் தந்த அப்டேட்! சென்னையில் எப்படி?
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை, ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது சில மாவட்டங்களில் மட்டும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வில்லிவாக்கத்திலும் 3 செ.மீ. மழையும், ரெட்ஹில்ஸ், சின்னகளார், சோழவரம், மேல்கூடலூர் ஆகிய பகுதிகளில் தலா செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மீண்டும் மீண்டும் வேலையைக் காட்டிய இலங்கை! தமிழக மீனவர்கள் நடுக்கடலில் விரட்டியடிப்பு! 8 பேர் கைது!
சென்னையில் மழை
வடசென்னையில், பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதேபோல், காசிமேடு, ராயபுரம், எண்ணூர், மணலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. சில தினங்களாக வெயில் வாட்டிய நிலையில், திடீரென பெய்த இந்த மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வானிலை அறிவிப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை, இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22-23 தேதிகளில்...
இதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மற்றும் அனையொட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், 22 மற்றும் 23-ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 24-ம் தேதி, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.