வாகன சோதனைகளை தாண்டி... மீன்பிடி படகுகளில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
சென்னை: தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் ஒருபுறம் அனல் பறக்கும் நிலையில், தேர்தல் பறக்கும் படையினரின் சோதனை தொடர்ந்து வருகிறது.
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்படும் பணங்கள் மற்றும் பொருள்கள், நாள்தோறும், கோடிக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் பறக்கும் படையினருக்கு அல்வா கொடுக்கும் விதமாக, சில அரசியல் கட்சியினர் புதிய வழிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில், கடல் வழியாக பணம் கொண்டுவரப்பட்டு வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அஞ்சு வருஷமா நீ இன்னா செஞ்சே.. இன்னாத்துக்கு இப்போ வர்ற.. எகிறி பாய்ந்த மக்கள்.. பதறி போன மரகதம்
தேர்தல் நடத்தை விதிகள்
நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 11-ம் தேதி தேர்தல் தொடங்குகிறது. தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தமிழகம் முதலிடம்
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பணமும், தங்கமும் அதிக அளவில் சிக்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று வரை 137 கோடியே 81 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 141 கோடி ரூபாய் மதிப்புள்ள 942 கிலோ தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2-வது இடத்தில் ஆந்திரா
95 கோடியே 79 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆந்திரா, இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது அங்கு 28 கோடியே 25 லட்சம் ரூபாய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி படகுகளில் சோதனை
வாகன சோதனையில் கொண்டு செல்லும் போதும் பணம் பறிமுதல் செய்யப்படுவதால், கடல் வழியாக பணம் கொண்டுவரப்பட்டு வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் புதுச்சேரியில், தீவிர சோதனை நடத்தினர். புதுச்சேரி கடல் எல்லையான கனகசெட்டிகுளம் முதல் புதுக்குப்பம் வரை 14 கி.மீ வரை கடலில் உள்ள படகுகளில் சோதனை செய்தனர்.
ஓட்டுக்கு பணம்
இதேபோல், தமிழக கடற்கரைகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை தொடங்கியுள்ளனர். தேர்தல் பறக்கும் படையினரை ஏமாற்றும் வகையில், சப்பாத்தியில் பணம் வைத்து கொடுப்பது, ரகசிய குறியீடுகள் மூலம் பணம் அளிப்பது, துண்டு சீட்டுகள் மூலம் பணம் கொடுப்பது என பல்வேறு விதமாக, வாக்குக்கு அரசியல்வாதிகள் பணத்தை திணித்து வருவதாக கூறப்படுகிறது.