நீட் தேர்வு - 25,000 பேர் கருத்து.. நீட் வேண்டாம் என்பதே பெரும்பாலோனோர் கருத்து.. நீதிபதி ஏகே ராஜன்
சென்னை: நீட் தேர்வுகள் குறித்து இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாகவும் பெரும்பாலானோர் நீட் வேண்டாம் என்றே கூறியுள்ளதாகவும் நீட் பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தெரிவித்தார்.
மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நீட் என்ற பொதுத்தேர்வை அறிமுகம் செய்தது. மருத்துவ படிப்புகள் அனைத்திற்கும் இந்த தேர்வின் மூலமே சேர்க்கை நடைபெற வேண்டும்.
8 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பஸ் சேவை? மருத்துவ வல்லுனர் குழு பரிந்துரை
இருப்பினும், தமிழ்நாட்டில் தொடக்கம் முதலே நீட் தேர்வுக்கு எதிரான கருத்தே நிலவியது.
நீட் தேர்வு
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டசபையில் ஒருமனதாகத் தீர்மானமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், அந்தத் தீர்மானத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதன் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிலும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
குழு அமைப்பு
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது, நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என்பதையும் திமுக தனது பிரசாரத்தில் தொடர்ந்து கூறியது.. திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும், நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து, தமிழ்நாடு அரசு கடந்த 5ஆம் தேதி உத்தரவு பிறப்பித்து.
முக்கியமான தரவுகள்
இந்நிலையில், இந்தக் குழுவின் 2ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன், "அனைத்து தரவுகளையும் தற்போது சேகரித்து வருகிறோம். இன்னும் சில முக்கிய தரவுகள் வர வேண்டியுள்ளது. அதற்குக் காத்திருக்கிறோம். இந்த தரவுகளின் அடிப்படையிலேயே எங்கள் அறிக்கை அமையும்.
25 ஆயிரம் கடிதங்கள்
நீட் தேர்வு குறித்து இதுவரை 25 ஆயிரம் கடிதங்கள் கிடைத்துள்ளன. அதில் பெரும்பாலானவற்றில் நீட் வேண்டாம் என்றே குறிப்பிட்டுள்ளனர். வெகு சிலர் மட்டுமே நீட் வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். அனைவரது கருத்தையும் உரிய முறையில் பரிசீலனை செய்வோம். அனைத்து தரப்பின் கருத்துகளை அறிந்த பின்பு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வோம். அரசுக்கு எங்களிடம் கேட்டுள்ள குறிப்புகளுக்கு மட்டுமே அறிக்கையில் விளக்கம் தரப்படும்.
வரும் ஜூன் 23க்குள்
அரசு எங்களிடம் ஒரு மாதத்தில் அறிக்கை கேட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய முயல்வோம். முடியாதபட்சத்தில் மட்டும் கால நீட்டிப்பு கோரப்படும்" என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்கள் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து வரும் ஜூன் 23ஆம் தேதிக்குள் [email protected] என்ற முகவரியில் கருத்துகளைக் கூறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.