4 லட்சம் பேர்.. சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பறந்து சென்ற மக்கள்.. வாக்களிக்க இவ்வளவு ஆர்வமா!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. கடந்த ஒரு மாதமாக திருவிழா போல நடந்த பிரச்சாரம் நேற்று முடிந்த நிலையில், நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடக்கும் உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிகளை இப்போதே தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்ய தொடங்கி உள்ளனர்.
எப்படி
இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சாதாரண நாட்களில் சென்னையில் இருந்து 2200 பேருந்துகள் வரை வெளியூர்களுக்கு இயக்கப்படும். இந்த நிலையில் தற்போது கூடுதலாக தினசரி 800-850 பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படுகிறது.
எத்தனை
தினசரி 3000 பேருந்துகள் என்று ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து தேர்தல் முடிந்து மறுநாள் வரை இயக்கப்பட உள்ளது. அதேபோல் கோவையில் இருந்தும் மற்ற மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 17000 பேருந்துகள் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு மொத்தமாக இயக்கப்படும். இந்த சிறப்பு பேருந்துகளை பிடிக்க பேருந்து நிலையங்களுக்கு செல்ல சென்னைக்கு உள்ளே இணைப்பு பேரூந்துகளாக 350 பேருந்துகள் தினசரி கூடுதலாக இயக்கப்படுகிறது.
எவ்வளவு
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதுவரை 10,500 பேருந்துகளில் 4,22,957 பேர் பயணித்துள்ளனர். வெறும் 4 நாட்களில் இத்தனை பேர் சொந்த ஊர்களுக்கு வாக்கு அளிக்க சென்றுள்ளனர்.
முன்பதிவு
57 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறார்கள். சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்ற இவர்கள் திரும்பி வரவும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . தேர்தலை முன்னிட்டு பல நிறுவனங்களில் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.