"கதறும் சென்னை மக்கள்".. பரனூர் சுங்கச்சாவடியில் ‛ஹெவி டிராபிக்’.. மொத்தமாக குவிந்த வாகனங்கள்
சென்னை: வார இறுதி நாட்கள் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி என்று தொடர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் 30 நிமிடங்கள் வரை வாகனங்கள் காத்திருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியை எதிர்கொண்டு வருகின்றனர்.
சனி, ஞாயிறு என்று ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் சென்னையின் பல இடங்களில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் என்பது ஏற்படும்.

அந்த வகையில் இன்று வெள்ளிக்கிழமையாகும். நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்று 2 நாட்கள் வார இறுதி நாள் விடுமுறை வருகிறது. அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து ஆகஸ்ட் 26ம் தேதி அரசு விடுமுறை தினம் வருகிறது.
அதாவது ஆகஸ்ட் 26ம் தேதி கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இதனால் அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்நிலையில் தான் வார இறுதி நாட்கள் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையையையொட்டி சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்களின் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.
ஒரு தரப்பினர் அரசு, தனியார் பஸ்களில் பயணித்து வருகின்றனர். பொதுமக்கள் பிரச்சனையின்றி சொந்த ஊர்களுக்கு சென்று வர வசதியாக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்றும், நாளையும் கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 330 சிறப்புப் பேருந்துக் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி கூடுதல் பஸ்கள் இயங்கி வருகிறது. பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல் மற்றொரு தரப்பினர் சொந்த கார்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர் நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளனர். இதனால் வழக்கத்தை விட செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாலை 6 மணியில் இருந்தே இந்த சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து காத்து நிற்கின்றனர்.
சுமார் 30 நிமிடங்கள் வரை வாகனங்கள் காத்திருந்து மெல்ல மெல்ல ஊர்ந்து செல்கின்றன. இதனால் சொந்த ஊரை நோக்கி செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆமை வேகத்தில் நகர்கின்றனர்.












Click it and Unblock the Notifications