அதிமுக உள்கட்சி தேர்தல் எதற்காக நடத்தப்பட்டது தெரியுமா?.. திருநாவுக்கரசர் கடும் விமர்சனம்
சென்னை: அதிமுக உள்கட்சி தேர்தல் ஆணையத்திற்காகவே நடத்தப்பட்டது என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக உள்கட்சி தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு விண்ணப்ப படிவம் வாங்க சென்ற அதிமுக தொண்டர்கள் தாக்கப்பட்டனர். இதையடுத்து யாரும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விடப்படாததால் ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸுமே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
இதை தேர்தல் ஆணையர்களாக செயல்பட்ட பொன்னையனும் பொள்ளாச்சி ஜெயராமனும் அறிவித்தனர். இந்த தேர்தல் எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து அதிமுகவில் உறுப்பினராக இருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்ற திருச்சி எம்பி திருநாவுக்கரசர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அம்பேத்கர் நினைவு தினம்
அம்பேத்கரின் 65 ஆவது நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த திருச்சி எம்பி திருநாவுக்கரசர் சென்றிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் சில அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்காகவே உட்கட்சி தேர்தலை நடத்தி வருகின்றனர்.

உள்கட்சி தேர்தல்
சிலர் ஜனநாயக முறைப்படி பின்பற்றினாலும் சிலர் அதை பின்பற்றுவதில்லை. அதன்படி தேர்தல் ஆணையத்தின் சட்டத்திற்காக சடங்கு சம்பிரதாயத்திற்காகவே அதிமுக உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

ஆங்கிலம்
ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் மற்ற மொழிகளின் ஆதிக்கம் தமிழகத்திற்குள் நுழைந்துவிடும். நாகாலாந்தில் 13 பொதுமக்களை தீவிரவாதிகள் என சுட்டுக் கொன்றதாக கூறுகின்றனர். நல்லவேளை ராணுவத்தினரை தீவிரவாதி என சுட்டுக் கொல்லவில்லை. இது மோடி அரசின் நிலையை காட்டுகிறது.

பாலியல் வழக்குகள்
ஆசிரியர்கள் தொடர்ந்து பாலியல் வழக்குகளில் சிக்குவது துரதிருஷ்டவசமானது. மாதா, பிதா, கடவுள் , வரிசையில் குருவாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள். அவர்களே இது போன்று தவறுகளில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத குற்றம். இதை தடுக்க ஆசிரியர் சங்கத்தினரும் காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications