திணறும் விஜய்.. ஆதரவு அளிக்கிறதா விசிக? ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமாளவன் பேசியது என்ன?
சென்னை: ஸ்டாலினை சந்தித்தது வழக்கமான சந்திப்புதான். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று திருமாவளவன் கூறினார். மேலும் விஜய்யை பதவியேற்க விடாமல் தடுத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர முயற்சிக்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. விஜய்க்கு ஆதரவு அளிப்பது குறித்து நிதானமாகத்தான் முடிவு எடுக்க முடியும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் களம் நொடிக்கு நொடி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலினை விசிக தலைவர் தொல் திருமாவளவன் சந்தித்து பேசினார். திருமவாளவனுடன் கம்யூனிஸ்ட் கட்சியினரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். விஜய் ஆதரவு கோரும் நிலையில் ஸ்டாலினுடன் நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. இந்த சந்திப்புக்கு பிறகாக திருமாவளவன் கூறியதாவது:-

ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர முயற்சி
ஓரிரு நாட்களில் கூடி பேசி எங்களின் முடிவை அறிவிப்போம். ஸ்டாலினை சந்தித்தது வழக்கமான சந்திப்புதான். மரியாதை நிமித்தமான சந்திப்பு. வாக்குகள் எப்படி சிதறின என்பது தொடர்பாக கருத்துகளை பகிர்ந்துகொண்டோம். மக்கள் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். அதன்படி ஆட்சி அமைக்க ஆளுநரை சந்திக்க கோரியிருக்கிறார்.
அவருக்கு எந்த வகையிலும் இடையூறாக இருக்க மாட்டோம் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். இந்த கருத்தை நாங்கள் ஏற்கிறோம். அந்த அடிப்படையில் எங்கள் கருத்துகளை சொல்லியிருக்கிறோம். விஜய் பதவியேற்பதில் எந்த நெருடலும் இல்லை. திமுக - அதிமுக கூட்டணி என பேசப்படுவது வெளியில் உள்ள தகவலாகவே உள்ளது. ஆதாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை. இதன் மீது கருத்து கூற எதுவும் இல்லை.
அரசமைப்பு சட்டப்படி ஆளுநர் செயல்பட வேண்டும். விஜய்க்கு ஒரு அரசியல் நெருக்கடி தர பாஜக முயற்சிக்கிறதோ? என்று ஐயம் எழுகிறது. தமிழ்நாட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் சூழல் தெரிகிறது. அல்லது அவரை பதவியேற்க விடாமல் தடுத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர முயற்சிக்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது.
தவெக - காங்கிரஸ் உறவை விரும்பாத பாஜக
மீண்டும் ஒரு தேர்தல் வருவதோ.. அல்லது குடியரசு தலைவர் ஆட்சி அமைப்பதோ ஏற்புடையது இல்லை. மக்கள் என்ன தீர்ப்பு அளித்து இருக்கிறார்களோ.. அதை செயல்படுத்த வேண்டும். இதுதான் ஆளுநரின் கடமையாகும். காங்கிரஸ்- தவெக கூட்டணிதான் இதற்கு காரணம் என்றும் சிந்திக்க தோன்றுகிறது. தவெக - காங்கிரஸ் உறவை பாஜக விரும்பவில்லை.
அதன் விளைவுத்தான் அவருக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. விஜய் மீது வழக்குகள் போடுவதற்கும் முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது. எதோ ஒரு வகையில் விஜய் பாஜகவின் நெருக்கடிக்கு ஆளாகிறார் என்று தெரிகிறது. விஜய்க்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில் உணர்ச்சிவயப்பட்டு எடுக்க முடியாது. பெரிய முடிவு.. எங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவு.
கம்யூனிஸ்டுகள் என்ன முடிவு எடுக்கிறார்களோ
எனவே நிதானமாகத்தான் முடிவு எடுக்க முடியும். அனைவரின் கருத்தையும் அறிந்து அதன் அடிப்படையில் முடிவு எடுக்க முடியும். கம்யூனிஸ்டுகளிடம் 2016 முதல் இணக்கமாக செயல்பட்டு வருகிறோம். கம்யூனிஸ்ட்டுகள் முடிவையும் நாங்கள் பொறுத்து இருந்து பார்க்க இருக்கிறோம். அவர்கள் எடுக்கு முடிவை பொறுத்து நாங்கள் முடிவெடுக்கலாம் என இருக்கிறோம்" என்றார்.














Click it and Unblock the Notifications