தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சி என்கிறார் முருகன்... இடமில்லை என்கிறார் ஜெயக்குமார்
வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் கூறியுள்ளார். இதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது அதிமுக அதிக இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் அட்சி அமைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. கொரோனா காலமாக இருந்தாலும் அரசியல் கட்சியினர் பரபரப்பாக வேலைகளை ஆரம்பித்து விட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதே கூட்டணி சட்டசபை தேர்தலில் தொடர வாய்ப்புள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் கூறி வருகிறார்.
அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று கூறும் எல். முருகன் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று கூறி வருகிறார். அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் தனித்து ஆட்சி
தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லை. காங்கிரஸ்,திமுக, அதிமுக என எதுவாக இருந்தாலும் தனிக்கட்சி ஆட்சி தான் அமைந்துள்ளது. 2006ஆம் ஆண்டு திமுக 96 இடங்களில் மட்டுமே வென்றாலும் கூட காங்கிரஸ் கட்சியுடன் அதிகாரத்தை அது பகிர்ந்து கொள்ளவில்லை. தமிழகத்தில் கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டுமே இருந்துள்ளதே தவிர ஆட்சி அமைய வாய்ப்பில்லை என்றே திமுக, அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

ஆட்சியை தீர்மானிப்போம்
2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எங்கள் கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் குரல் எழுப்புவார்கள் என்று கூறியுள்ளார் பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன். சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்து அமைய உள்ள ஆட்சியை தீர்மானிக்கப் போவது பாஜகதான் என்று கூறினார்.

எல். முருகன் கருத்து
சட்டசபைத் தேர்தலில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்க போகிறது என்று கூறிய முருகன், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார் எல். முருகன். பாஜக ஆதரவின்றி எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

கூட்டணி ஆட்சியா?
எல்.முருகன் கூறிய கருத்துக்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார். 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார். அதிமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications