சீமான் ரெடி.. ஜூன் 4 -க்குப் பின் ’பாமரனின் நடைபயணம்’.. கடலோர கிராமங்களுக்கு குறிவைத்து பாதயாத்திரை!
சென்னை: லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த கையுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு முழுவதும் 'பாமரனின் நடைபயணம்' என்ற தலைப்பில் பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தமிழ்நாட்டின் கடற்கரை கிராமங்களை இலக்கு வைத்து சீமான் இந்த பாதயாத்திரையை மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழ்நாட்டு அரசியலில் 15 ஆண்டுகளாக சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெறாத கட்சிதான் நாம் தமிழர் கட்சி. ஆனாலும் ஒவ்வொரு தேர்தலிலும் தனித்தே போட்டியிடுகிறது. அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதால் வாக்கு சதவீதம் ஒவ்வொரு முறையும் நாம் தமிழர் கட்சிக்கு உயருகிறது.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக, எதிர்க்கட்சி அதிமுகவுக்கு அடுத்த 3-வது பெரிய கட்சி எது என்பதில் அண்மையில் கூட பாஜகவும் நாம் தமிழர் கட்சியும் மோதிக் கொண்டன. பாஜகவை விட குறைவான வாக்கு சதவீதம் பெற்றால் கட்சியையே கலைப்பேன் என அண்ணாமலைக்கு சவால்விட்டார் சீமான்.
லோக்சபா தேர்தலில் சீமான் நிலைப்பாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நாம் தமிழர் கட்சியில் இருந்து தொடர்ந்தும் பலர் வெளியேற்றப்பட்டும் வருகின்றனர். ஆனாலும் எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் சீமான் தொடர்ந்து பயணிக்கிறார்.
இதன் அடுத்த கட்டமாக லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த கையோடு தமிழ்நாடு முழுவதும் பாமரனின் நடைபயணம் என்ற தலைப்பில் பாதயாத்திரை செல்லத் திட்டமிட்டுள்ளாராம் சீமான். இதற்கான பயணத் திட்டம் ஏற்கனவே தயாராக இருக்கிறதாம். லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லும் வாய்ப்பு குறைவுதான் என்கிற நிலை உள்ளது. இதனால் அடுத்த கட்டமாக 2026 சட்டசபை தேர்தலை இலக்கு வைத்து முதல் கட்சியாக களமிறங்குகிறது நாம் தமிழர் கட்சி.
கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை தமிழ்நாட்டின் அனைத்து கடலோர கிராமங்களையும் இலக்கு வைத்து சீமானின் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட இருக்கிறதாம். மீனவர்கள் பிரச்சனைக்காக தொடர்ந்து பேசி வருகிறார் சீமான். மீனவர்களுக்காக நெய்தல் படை கட்டுவேன் எனவும் சீமான் பேசி வருகிறார். இதன் அடுத்த கட்டமாக கடலோர கிராமங்களை குறிவைத்து சீமான் பாதயாத்திரை செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications