'அசுர வளர்ச்சி'.. தனி 'ஆளுமை'யாக உருவெடுக்கும் சீமான்.. காத்திருக்கும் 'மூன்றாவது' இடம்
சென்னை: எதிர்வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் 'எக்ஸ் ஃபேக்டர்' கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது என்பதை கருத்துக்கணிப்புகள் உணர்த்துகின்றன..
Recommended Video
ஆம்! தமிழக சட்டசபைத் தேர்தல் அல்மோஸ்ட் நெருங்கிவிட்டது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. ஏப்ரல் 6 அன்று, மக்கள் தங்களது அடுத்த 5 ஆண்டுகளுக்கான தலைவிதியை நிர்ணயிக்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
எவ்வளவு தான் கட்சிகள் கூப்பாடு போட்டாலும், மக்கள் தங்கள் மனதில் போட்டு வைத்திருக்கும் கணக்கும், நாஸா கம்ப்யூட்டர்களுக்கும் அப்பாற்பட்டது. அவ்வளவு எளிதில் நீங்கள் யூகிக்க முடியாது.
முதன் முறையாக
அந்த வகையில், மக்கள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நம்பிக்கை வைக்க தொடங்கியிருப்பதை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன. தமிழர் உரிமை என்பதை பிரதான கொள்கையைக் கொண்டு 10 ஆண்டுகளாக அரசியலில் களமாடி வரும் சீமான், முதன் முறையாக வரும் சட்டசபைத் தேர்தலில் இம்பேக் ஏற்படுத்த தயாராகிவிட்டார்.
மூன்றாவது இடம்
சத்தியம் டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின் படி, தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி தனிப் பெரும் சக்தியாக உருவெடுக்கப் போவது தெரிய வருகிறது. குறிப்பாக, தமிழகத்தின் எல்லை மாவட்டமான கன்னியாகுமரியில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்து நிற்கிறது நாம் தமிழர் கட்சி. கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் என்றும் 2 தொகுதிகளில் இழுபறி உள்ளதாகவும் சத்தியம் டிவி தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. அதேசமயம்,
அங்கு மொத்தமுள்ள ஆறு தொகுதிகளிலும் வெற்றியை தீர்மானிக்கும் கட்சியாக கருத்துக்கணிப்பின் முடிவுகளில் தெரியவந்துள்ளது. அங்கு அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருப்பது நாதக தான்.
விரும்பும் தம்பிகள்
பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளையும் சரமாரியாக விமர்சித்து வருகிறார் சீமான். 'சாஃப்ட் அப்ரோச்' என்பதே அவரது பிரசாரத்தில் இருக்காது. தனது விமர்சனத்தில் எந்த தயக்கமும், பின்வாங்கலும் இன்றி துணிச்சலாக நின்று அடிப்பதை தனது ஸ்டைலாக வைத்திருக்கிறார். இந்த அப்ரோச்சை தான் அவரது தம்பிகளும் விரும்புகின்றனர்.
அதிர்ந்த இடம்
சமீபத்தில் கூட செந்தில் பாலாஜிக்கு எதிராக பேசிய சீமான், 'ஸ்டாலின் 10 மணிக்கு பதவியேற்ற பிறகு, 10:05க்கு எல்லோரும் மாட்டு வண்டியை எடுத்துக் கொண்டு மணல் அள்ளச் செல்லுங்க. எந்த அதிகாரி வந்து தடுத்து நிறுத்துறார்னு பார்க்குறேன்'-னு செந்தில் பாலாஜி சொல்றார். அங்க எந்த அதிகாரியும் வரமாட்டார். ஆனா, 10:10க்கு இந்த சீமான் வந்து நிற்பான். என்னை தாண்டி எப்படி மணலை அல்லுறீங்கன்னு நான் பார்க்குறேன்' என்று சீமான் பேச, ஆரவாரத்தில் அதிர்ந்த அந்த இடம் அடங்க 5 நிமிடங்கள் ஆனது.
கவனிக்கும் மக்கள்
இளைஞர்கள் மட்டுமல்ல, இப்போது மக்களும் சீமானின் குரலை கவனிக்கத் தொடங்கியுள்ளனர். தேர்தல் சமயத்தில் மட்டும் மக்களோடு மக்களாக சங்கமிப்பது, டீ குடிப்பது, பேருந்தில் பயணியாக உருவெடுத்து என்று தேர்தல் ஸ்டண்ட்ஸ் புரியும் தலைவர்களை பார்த்து பார்த்து சலித்துப் போன மக்கள், சீமானை கவனிக்கத் தொடங்கியுள்ளனர் என்பதையே இந்த தேர்தல் கருத்துக்கணிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.