நாதகவில் முக்கிய “விக்கெட்”! கொள்கை பரப்பு செயலாளர் தமிழரசன் விலகல்! சீமான் மீது பரபர குற்றச்சாட்டு!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாஜக மனிதகுலத்தின் எதிரி எனச் சொல்லிவிட்டு தற்போது அக்கட்சியின் தலைவர்களை சீமான் புகழ்ந்து பேசுவது முரணாக உள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளார் தமிழரசன்.
மேலும், கட்சியின் தத்துவங்களை மேடைகளில் பேசி வந்த சீமான், தமிழ் தேசியத்திற்கு எதிரான, ஒரு பிழையான தத்துவங்களை நோக்கி பயணப்படும் பாஜகவிடம் எங்களை விற்றுவிடுவீர்கள் என்றே தோன்றுகிறது என தமிழரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி தெரிவித்து கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். அண்மையில் பெரியார் குறித்து சீமான் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பல நிர்வாகிகள் கட்சியிலிருந்து வெளியேறினர்.
கட்சியில் இருந்து விலகுபவர்கள் மாற்றுக் கட்சிகளில் சேர்ந்தும் வருகின்றனர். மேலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நாதகவில் இருந்து விலகுவது தொடர்பாக தமிழரசன் வெளியிட்டுள்ள கடிதத்தில், "அண்ணன் சீமான் அவர்களுக்கு வணக்கம்!.
32 ஆண்டு காலமாக தமிழ்த் தேசிய அரசியலுக்கான பயணத்தில் இருந்தபோதும் கட்சித் தொடங்கிய நாட்களிலிருந்து 15 ஆண்டுகளாக தற்போது வரை, கட்சிக்கான களங்களில், மக்களுக்கான தளங்களில், இணைந்து பணியாற்றியதை எண்ணி மகிழ்கிறேன். சமீப காலமாக உங்கள் பேச்சும் செயலும் நமது தமிழ் தேசிய கருத்துகளுக்கு முரணாக இருக்கின்றது.
எதைச் சொல்லுவது? மதவாத அரசியலை எதிர்ப்பதாக கூறுகின்ற தாங்கள், பாஜக மனித குலத்தின் எதிரி என்று சொல்லிவிட்டு, தற்போது அந்த அமைப்பில் இருக்கிற எச்.ராஜாவை பேரறிஞர் என்று சொல்வதையா? தமிழிசை 'சீமான் எங்கள் தீம் பார்ட்னர்' என்று கூறியதை நீங்கள் மறுக்காததையா!? திருமாவனவனை அண்ணன் என்று கூறிக்கொண்டே நாம் தமிழர் கட்சி மேடையில் மாற்று இயக்கத்தினர் மேடை நாகரிகம் இன்றி விமர்சிக்கும் போதும் கேலி பேசும் போதும், தாங்கள் கைத்தட்டி சிரித்து மகிழ்வதையா?
நடிகர் விஜய் கட்சி தொடங்குகிற போது தம்பியென்று சொன்னதையும், அவரே என்னை எதிர்த்தாலும் நான் அவரை எதிர்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, நடுரோட்டில் நின்றால் லாரி அடித்து செத்துவிடுவாய் என்று பேசியதையா? தம்பி அப்துல் ரவூப் நினைவு நாளில் என்னை யாராவது "சங்கி" என்றால் செருப்பால அடிப்பேன் என்று செருப்பை காட்டிவிட்டு, நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்த பிறகு, சங்கி என்றால் சக தோழன்' என்று சொல்வதையா? இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதை எப்படி ஏற்பது?
மாற்றுக் கட்சியில் இருப்பவர்களைத் தான் இப்படி பேசுகிறீர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எங்கள் குலதெய்வம் நங்கை காளியம்மாள் என்று கூறிய நீங்கள், "பிசுறு" என்று பேசியதையும், தலைவருக்கு நிகராக நாங்கள் மதித்து வந்த பொட்டு அம்மான் அவர்களை இழிவாகப் பேசி வந்த குரல் பதிவையும், இன்றளவிலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இப்படி இன்னும் எத்தனையோ..! இந்தச் சூழலில் கட்சியின் தத்துவங்களை மேடைகளில் பேசி வந்த தாங்கள், தமிழ் தேசியத்திற்கு எதிரான, ஒரு பிழையான தத்துவங்களை நோக்கி பயணப்படும் பாஜகவிடம் எங்களை விற்றுவிடுவீர்கள் என்றே தோன்றுகிறது. அதே வேளையில் மேடையில் உங்களுக்கு முன்னால், சாதிப் பெருமை பேசுகிறவர்களை, இப்படி பேசாதே என்று கண்டிக்காமல், சிறிதும் பொறுப்புணர்வற்று கைக்கொட்டி சிரித்து, சாதி வெறியைத் தூண்டுவதை ஆமோதிக்கின்றீர்கள். தமிழ்த் தேசிய விடுதலையில் சாதி ஒழிப்பு அவசியம் எனும் போது, மேற்கண்ட தங்களின் செயல்கள், மன வேதனையைத் தருகிறது.
தேசியத் தலைவர் பிரபாகரனின் தத்துவங்களையும், கட்சியின் கொள்கைகளையும், கட்சியில் உள்ள அனைவரும் முன்னெடுக்க வேண்டும் என்கிற நிலையை மாற்றி, நீங்கள் சொல்வதே கொள்கை, நீங்கள் பேசுவதே தத்துவம் என்றும், பிரபாகரனிசத்தை சிதைத்து, சீமானிசத்தை விதைத்து. கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறீர்கள்.
எனது இத்தனை ஆண்டுகால தமிழ்த்தேசிய அனுபவமும், கடந்து வந்த பாதைகளும், அனைத்து மக்களுக்கான அரசியலை நோக்கி, உங்கள் தலைமை ஏற்றுக் கொண்டு இனிமேல் என்னால் தொடர முடியாது என்பதை உணர வைத்திருக்கிறது. மண்ணுக்கான மக்களுக்கான, மக்களாட்சி தத்துவத்திற்கான அரசியலை நோக்கி எனது பயணம் தொடரும்..
எனவே, தற்போது நாம் தமிழர் கட்சியில் வகித்து வரும், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும், விலகுகிறேன் என்பதை. இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுநாள் வரை, கட்சியில் உடன் பயணித்த வழிகாட்டிகள், அண்ணன் தம்பிகளுக்கும், அக்கா தங்கைகளுக்கும் உறவுகள் அனைவருக்கும். நன்றிகளை உரித்தாக்கி வணங்கி மகிழ்கிறேன்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
இது ஆட்சிக்கு மட்டும் அல்ல, கட்சிக்கும் பொருந்தும்
நன்றி! தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications