டெல்லியில் இருந்து வந்த அவரச அழைப்பு...புறப்பட்டு சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி
டெல்லியிலிருந்து வந்த அவசர அழைப்பின்பேரில் ஆர்.என்.ரவி சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
சென்னை: தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் ஆளுநர் டெல்லி புறப்பட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாகலாந்து மாநிலத்தில் பயங்கரவாதிகள் என நினைத்து தவறுதலாக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் நாகலாந்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
கொந்தளித்த மக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இணையதள சேவை துண்டிப்பு
பொது மக்கள் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை நாகாலாந்து அரசு அமைத்துள்ளது. மேலும் அசம்பாவிதங்கள், வன்முறை சம்பவங்கள் தொடராமல் இருக்க முன்னெச்சரிக்கையாக செல்போன் எஸ்எம்ஸ், இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்க் எஸ்.எம்.எஸ்.சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியினர் கொதிப்பு
இச்சம்பவத்துக்கு ராணுவம் வருத்தம் தெரிவித்த போதும் நாகா இன மக்களிடையே பெரும் கொந்தளிப்பு நிலவுகிறது. 13 பேர் கொல்லப்பட்ட சூழலில் தலைநகர் கோஹிமாவில் ஹார்ன்பில் நிகழ்ச்சிகளை மாநில அரசு ரத்து செய்துள்ளது. ஏற்கனவே ஹார்ன்பில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று கோன்யாக் பழங்குடிகளின் பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர்.

தமிழக ஆளுநர் டெல்லி பயணம்
இந்த சூழ்நிலையில் டெல்லியிலிருந்து வந்த அவசர அழைப்பின்பேரில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று இரவு கோவை சென்று, அங்கிருந்து நாளை சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. இந்நிலையில் அவரது இந்த திட்டம் மாறியுள்ளது.

அவசர அழைப்பு
தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என். ரவி, ஏற்கனவே நாகலாந்து மாநில ஆளுநராக இருந்துள்ளார். நாகா குழுக்களுடனான அமைதி முயற்சியில் மத்திய அரசின் சார்பில் மத்தியஸ்தராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். எனவே, நாகலாந்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க உள்துறை அமைச்சகம் ஆளுநர் ஆர்.என்.ரவியை அழைத்து இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications